ஜெய்ப்பூர்: சிஏஏ எதிர்ப்பு கருத்துக்காக, உத்திரப்பிரதேசத்தின் யோகி அரசால் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்பட்ட மருத்துவர் கஃபீல் கான், தற்போது ராஜஸ்தான் மாநிலத்திற்கு குடியேறியுள்ளார்.

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிஏஏ எதிர்ப்புக் கருத்துக்களை தெரிவித்த காரணத்தால், உத்திரப்பிரதேச காவி அரசால் தேசியப் பாதுகாப்பு சட்டம் பாய்ச்சப்பட்டு, 8 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர், இவரின் மீதான நடவடிக்கையை அலகாபாத் உயர்நீதிமன்றம் ரத்துசெய்தது. இந்நிலையில், இவர் தனது குடும்பத்துடன் ராஜஸ்தான் மாநிலத்திற்கு குடியேறியுள்ளார்.

“ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்கிறது. இங்கே எங்களால் பாதுகாப்பாக இருக்க முடியுமென எங்களின் குடும்பம் உணர்கிறது. எனது குடும்பத்துடன் நல்ல முறையில் நேரம் செலவிட விரும்புகிறேன்.

நான் எளிய வாழ்க்கையை நடத்தினேன். ஆக்ஸிஜன் குறைபாட்டால் கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் இறந்ததை குறிப்பிட்டு நான் பேசினேன். இதை எங்கள் முதல்வரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே, என்மீது பொய் வழக்கு புனையப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டேன்” என்றுள்ளார் அவர்.