டில்லி:

பாராளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள  தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை கண்டித்து நாளை நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளனர். நாளை அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாது என்று அறிவித்து உள்ளனர்.

மோடி தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, முதல் பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே பல்வேறு திருத்த மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றி வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தாலும், அதை கண்டுகொள்ளாமல், தனி மெஜாரிட்டி இருப்பதால், தான்தோன்றித்தனமாக மக்கள் நலனை கருத்தில்கொள்ளாமல் பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றி வருகிறது.

முத்தலாக், எல்ஐஏ, அணை பாதுகாப்பு, ஆர்டிஐ திருத்தம் போன்ற மசோதாக்களை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றி உள்ளது. அதுபோல, தேசிய மருத்துவ ஆணையம் உருவாக்கும் வகையில் புதிய மசோதாவை யும் பலத்த எதிர்ப்புக்கிடையில் மக்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றி உள்ளது.

மசோதாவில் உள்ள ஷரத்துப்படி, இந்திய மருத்துவ கவுன்சிலுக்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வரப்படும். அந்த ஆணையத்துக்கு பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்காக மருத்துவ ஆலோசனை குழு அமைக்கப்படும்.

மத்திய அரசின் புதிய சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதையடுத்து, மத்தியஅரசின்  நடவடிக்கையை கண்டித்தும், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,  நாடு முழுவதும்  உள்ள மருத்துவர்கள் நாளை வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்து உள்ளனர்.

நாளை ஒருநாள்  புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாது என்றும் தெரிவித்து உள்ளார்.

இந்த மசோதாவுக்கு தமிழகத்தை சேர்ந்த திமுக, அதிமுக மற்றும் விசிக ஆகிய  கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தி ருந்தது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் அதிமுக தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை அதிமுக எதிர்பதாக மக்களவையில் ரவீந்திரநாத் குமார் எம்.பி தெரிவித்துள்ளார். அதுபோல, தேசிய மருத்துவ ஆணைய மசோதா ஏழை மக்களுக்கு எதிரானது என்று திமுக எம்.பி. ஆ.ராசா தெரிவித்து தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.