சென்னை,

சைதை துரைச்சாமி வீட்டில் ரெய்டு நடத்த வேண்டும் என்று கூறிய மு.க.ஸ்டாலினுக்கு சைதை துரைச்சாமி சரமாரியாக கேள்வி விடுத்துள்ளார்.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்,  சசிகலா குடும்பத்தினரின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனை போல  அமைச்சர்களின் வீடுகளிலும் சோதனை நடத்த வேண்டும் என்றும்,  இலவசமாக கல்வி வழங்குகிறேன் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வரும் சைதை துரைசாமி வீட்டிலும் சோதனை நடத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் கருத்துக்கு பதிலளித்த சைதை துரைசாமி சரமாரியாக கேள்வி விடுத்துள்ளார்.

மற்ற ரெய்டுகளைப் பற்றி கேட்கும் மனுநீதி சோழனின் வாரிசு மு.க.ஸ்டாலின் இதையும் கேட்க வேண்டும் என்று மிக காட்டமாக கூறினார்.

மணல் மாபியா  சேகர்ரெட்டிக்கும்,  மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருக்கும் பணத்தொடர்பு உண்டா, இல்லையா என்பதை ஸ்டாலின் தெளிவு படுத்த வேண்டும் என்றும்,

2ஜி முறைகேடு பணத்தில் கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் வந்தது உண்மையா? இல்லையா?

ஹம்மர் கார் வாங்கிய விவகாரத்தில் உதயநிதி வீட்டில் ரெய்டு நடந்தது என்னவாயிற்று என்பதை யும் ஸ்டாலின் கேட்க வேண்டும் என்றார்.

மேலும், வருமானத்துக்கு அதிகமாக நான் சொத்து சேர்த்ததாக நிரூபித்தால் பொது வாழ்க்கையை விட்டே செல்கிறேன் என்றும் சைதை துரைசாமி கூறினார்.

மேலும், கல்வியை இலவசமாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தான் அறக் கட்டளை  நடத்தி வருவதாகவும், கல்வியை பணமாக்க நினைத்திருந்தால் ஆண்டுக்கு 120 கோடி ரூபாய் பெற்றிருக்க முடியும் என்றும் , அறக்கட்டளை மூலம் பல உயரதிகாரிகளை உருவாக்கி வருகிறேன். என்னுடைய சேவையைக் களங்கப்படுத்தும் விதத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் மீது வழக்கு தொடருவேன் என்றும் கூறினார்.