சென்னை:

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று மத்திய அரசு  அறிவித்துள்ள தற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில்,

‘தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதியோ, மக்கள் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்துவதோ இனி தேவையில்லை என மத்திய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா உள்ளிட்ட வேளாண் பகுதிகளைச் சீரழித்துவிடும் ஆபத்து நிறைந்த இந்த உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களைப் பெயரளவிற்கு மட்டுமே எதிர்த்து வரும் ஆளும் பழனிசாமி அரசும், அதிக எம்.பி.க்களை வைத்திருக்கின்ற திமுகவும் மத்திய அரசின் இந்நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த தேவையான முயற்சிகளை, உண்மையான அக்கறையோடு மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.