டில்லி,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன், தனக்கு கடந்த முறை ஒதுக்கிய தொப்பி சின்னத்தையே ஒதுக்க, தேர்தல் ஆணையத்துக்கு  உத்தரவிட வேண்டும் என டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. அப்போது, டிடிவிக்கு தொப்பி கிடைக்குமா அல்லது வேறு சின்னம் கிடைக்குமா என்பது தெரிய வரும்.

ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேட்சையாக களமிறக்கும் டிடிவி தினகரன், தனக்கு தொப்பி சின்னம் வேண்டும் என்று தேர்தல் அலுவலரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், தொப்பி சின்னத்தை மேலும் இரண்டு சுயேட்சைகள் கேட்டிருப்பதாக கூறிய தேர்தல் அலுவலர், குலுக்கல்முறையில்தான் ஒதுக்க முடியும் என்று கூறிவிட்டார்.

இதன் காரணமாக, டில்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 1ந்தேதி தேர்தல் ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் இன்று டில்லி ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்க உள்ளது.

தீர்ப்பில்  தினகரனுக்கு தொப்பி சின்னம் வழங்கப்படும்  என்று அவரது அணியினர் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள்.

ஆனால், டில்லி ஐகோர்ட்டோ, சின்னம் ஒதுக்கீடு குறித்து  தேர்தல் ஆணைய முடிவுக்கு விட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.