வாஷிங்டன்:  சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ந்து பதிவிட்டு வந்ததால், அமெரிக்க அதிபர் டிரம்பின் டிவிட்டர் சமுக வலைதள கணக்கு நிரந்தரமாக மூடப்படுவதாக டிவிட்டர் நிர்வாகம் அதிரடியாக அறிவித்துஉள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரின் வெற்றி செல்லாது என வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைதளங்களில் டொனால்ட் ட்ரம்ப் பதிவிட்டுவந்தார். இது தொடர்பாக அவரின் சமூக வலைதள பக்கங்களை காலவரையின்றி முடக்கி வைத்த நிலையில், தற்போது டிவிட்டர் நிறுவனம் டிரம்பின் கணக்கை நிரந்தரமாக முடக்கி உள்ளதாக அறிவித்து உள்ளது.

இச்சூழலில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். அவரது வெற்றியை ஏற்க மறுத்த டிரம்ப், அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையிலான வீடியோக்களை தனது பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இதன் எதிரொலி, நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை  நிகழ்ச்சியின்போது,  டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வன்முறையில் ஈடுபட்டனர்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், டிரம்பின் வன்முறை பதிவுகளை தடுக்கும் வகையில்,  பேஸ்புக் நிறுவனம் தங்களின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களில் டிரம்ப் தொடர்ந்து செயல்பட காலவரையின்றி தடைவிதித்துள்ளது. அதேபோல டிவிட்டர் நிறுவனமும் முதல் சில மணி நேரம் மட்டும் தற்காலிகமாக முடக்கி நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில், தற்போது அதிபர் டிரம்பின்  டிவிட்டர் பக்கத்தை நிரந்தரமாக முடக்கியுள்ளதாக டிவிட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தெரிவித்துள் டிவிட்டர் நிறுவனம்,  டொனால்ட் டிரம்பின் அனைத்து டிவீட்களையும் மறுபரிசீலனை செய்த பின்னர், ஆபத்து இன்னும் முடிவடைய வில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால்,  டிரம்ப் ஜனவரி 6 போன்ற வன்முறையை மீண்டும் ஒரு முறை தூண்ட முயற்சிக்க முடியும். அதனால் அவரது டிவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படுகிறது என கூறியுள்ளது.