வாஷிங்டன்:

னி அணு ஆயுத சோதனைகள் நடத்த மாட்டோம் என்று வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் அறிவிப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த வடகொரியா, பல்வேறு வகையான அணு ஆயுத சோதனைகளை நடத்தி தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளை மிரட்டி வந்தது.

இந்நிலையில் தற்போது, வட கொரியா, தென் கொரியா இடையே பதற்றம் குறைந்து அமைதியான சூழல் தற்போது உண்டாகியுள்ளது. மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும், வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னும் முதன்முறையாக வரும் மே மாதம் சந்தித்து பேச திட்டமிடப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தென்கொரிய அதிபருடன் விரைவில் பேச்சு வார்த்தை நடைபெற இருப்பதை தொடர்ந்து, இனி மேல் அணு ஆயுத சோதனைகள் நடத்த மாட்டோம் என்றும், அணுஆயுத சோதனை தளத்தையும் உடனடியாக மூடப் போவதாக வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார்.

கொரிய தீபகற்பத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் அமைதியை இலக்காக வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு கூறி உள்ளது.

வடகொரிய அதிபரின்  இந்த அறிவிப்பு குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரவேற்பு தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

இது “வட கொரியாவிற்கும், ஒட்டு மொத்த உலகிற்கும் இது நற்செய்தி – பெரிய முன்னேற்றம்” என்று கூறி உள்ளார்.

வட கொரியாவின் இந்த அறிவிப்பானது  “அர்த்தமுள்ள ஒரு முன்னேற்றம்” என்று தென் கொரிய அதிபரின் செய்தி தொடர்பாளர் வரவேற்றுள்ளார்.

ஏற்கனவே, அணு ஆயுத பயன்பாட்டை நிறுத்தினால், வட கொரியாவிற்கு ஒளிமையமான எதிர்காலம் இருக்கும் என டிரம்ப் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.