சென்னை:
கொரோனாவுக்கு நன்கொடை தாருங்கள்  என்று 3வது முறையாக மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மே 3ந்தேதி ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் கடந்த 24ந்தேதி இரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி வழங்குங்கள் என்று முதல்வர் எடப்பாடி வேண்டுகோள் விடுத்து வருகிறார்.
ஏற்கனவே நிதி தாருங்கள் என 2 முறை வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் இன்று 3வது முறையாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 20ஆம் தேதி வரை, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து மொத்தம் 160 கோடியே 94 லட்சம் வரை வந்திருந்தது. இதன் பிறகு பத்து நாட்களில் மட்டும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து 145 கோடியே 48 லட்சம் ரூபாய் வரப்பெற்றுள்ளது.
இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை 306 கோடியே 42 லட்சத்து 10 ஆயிரத்து 558 ரூபாய் ஆகும்.
நிவாரண நிதி அளித்த நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், அரசு சார் நிறுவன ஊழியர்களுக்கும், தொடர்ந்து அரசுக்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
மேலும்,  கொரோனா   தொற்றால் ஏழை எளிய மக்கள் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய இன்னல்களிலிருந்து அவர்களை விடுவிக்கவும், தடுப்பு நடவடிக்கைகளுக்கும், மனம் உவந்து மக்கள் தங்கள் பங்களிப்பினை அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் பிரிவு 80(G) கீழ் 100% வரிவிலக்கு உண்டு என்று தெரிவித்து உள்ளார்.