“பெண்களை இழிவாக விமர்சிக்கக் கூடாது” என்று தனது ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை கூறியுள்ளார்.

தான்யா என்கிற பெண் செய்தியாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் நடித்த சுறா படத்தை கிண்டலாக விமர்சித்திருந்தார். உடனே விஜய் ரசிகர்கள் பலர் அவரை ஆபாசமாக விமர்சிக்க ஆரம்பித்தினர்.  இதையடுத்து சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் தான்யா, புகார் அளித்தார்.  காவல்துறையினர் விசாரணை நடத்தி விஜய் ரசிகர்கள் இருவர் மீது வழக்கு பதிந்தனர்.

பெண் செய்தியாளர் மீது  தனிமனித தாக்குதல் நடத்திய விஜய் ரசிகர்களை தி.மு.க.  செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டித்தார். தற்போது நடிகர் விஜய்யும் தனது ரசிகர்களுக்கு அறிவுரை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான்.. யாருடைய திரைப்படத்தையும், யாரும் விமர்சிப்பதற்கு கருத்து சுதந்திரம் உண்டு. எக்காரணம் கொண்டும், எந்த நேரத்திலும், பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ, விமர்சிக்க கூடாது என்பது எனது கருத்தாகும்..

அனைவரும் பெண்மையை போற்ற வேண்டும்.. யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில், சமூக இணையதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்” என்று விஜய் தெரிவித்துள்ளார்.