கொழும்பு: இந்திய நாட்டுக்கு எதிராக ஒருபோதும் எந்த காரியத்திலும் இறங்க மாட்டேன் என்று இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறி இருக்கிறார்.

அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாசாவை வீழ்த்தி, வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சே இலங்கையின் புதிய அதிபராக பதவி ஏற்றார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, வரும் 29ம் தேதி அவர் டெல்லி வர இருக்கிறார்.

இந் நிலையில், இந்திய நலன்களுக்கு எதிரான எந்த காரியத்திலும் இறங்க மாட்டேன் என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் கூறியதாவது: இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் எந்த நடவடிக்கையிலும் நாங்கள் இறங்க மாட்டோம்.

சீனாவுடனான எங்கள் உறவு வெறும் வணிக நோக்கத்துக்காக தான். வல்லரசு நாடுகளுக்கு இடையே அதிகாரப்பகிர்வில் நாங்கள் இணைத்துக் கொள்ள தயாரில்லை.

ஹம்பந்தோட்டா துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு விடப்பட்டது தவறு. அதை சொல்ல எனக்கு எந்த பயமும் இல்லை என்றார். அதிபராக அவர் பதவியேற்ற பின், இந்தியா வருவது தான் கோத்தபயாவின் முதல் வெளிநாட்டு பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.