சென்னை: நிர்வாகிகளை நியமிக்கும் போது பணம் பெறக்கூடாது என மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்து நடிகர் ரஜினிகாந்த் , ஜனவரியில் தொடங்க உள்ள கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தியையும் நியமித்துள்ளார். இந்த நிலையில், ரஜினியின் கட்சியின் பெயர் ‘மக்கள் சேவை கட்சி’ என்றும், அந்த கட்சிக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் வெளியிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நிர்வாகிகளை நியமிக்கும் போது பணம் பெறக்கூடாது என மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ரஜினி மக்கள் மன்றம், மாவட்ட செயலாளர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமிக்கும் போது பதவிக்காக பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கப்படுவர். பூத் கமிட்டி போன்றவற்றிற்கு நிர்வாகிகளை நியமிக்கும் போது பணம் பெறக்கூடாது. சாதி, மதம் பார்க்காமல் அனைவரையும் பூத் கமிட்டியில் நியமிக்க வேண்டும்.
மன்ற நிர்வாகிகள் டிசம்பர் 25-ம் தேதிக்குள் பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியலை தலைமை அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். ரஜினி கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுக்கக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல்களை மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.