சென்னை: புயல் நேரங்களில் நாம் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்ன என்பது குறித்து விவரித்திருக்கிறது தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு தென் கிழக்கே410 கி.மீதொலைவிலும், சென்னைக்கு 450 கிமீ தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது.

ஆனால் 3 மணி நேரமாக நிவர் புயல் ஒரே இடத்தில் நிலை கொண்டு வலுவடைந்து வருகிறது. நாளை மாலை தீவிர புயல் கரையை கடக்கும் என்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 27ம் தேதி வரை மழை தொடரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், புயல் நேரத்தில் மக்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன என்பது குறித்து தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் விரிவாக விளக்கி இருக்கிறது.

புயலுக்கு முன் செய்ய வேண்டியவை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்: அடையாள அட்டைகள், சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பத்திரப்படுத்துங்கள். அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் குடிநீரை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

டார்ச் லைட், பேட்டரி ரேடியோ, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி போன்ற உபகரணங்களை இருப்பில் கொள்ளுங்கள். தாழ்வான, புயலால் சேதம் வகையில் இருப்பிடம் கொண்டவர்கள் நிவாரண மையங்களை நாடலாம். வாகனங்களை மரங்களுக்கு அடியில் நிறுத்த வேண்டாம்.

புயல் தாக்கும் போது செய்ய வேண்டியவை என்ன என்பதையும் முழுமையாக விவரித்திருக்கிறது மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்.

வீட்டை விட்டு எக்காரணம் கொண்டும் வெளியில் செல்லக்கூடாது. கண்ணாடி ஜன்னல்கள், மரங்கள், மின் கம்பங்கள் போன்ற உடைந்து விழும் பொருட்களுக்கு அருகில் செல்லக் கூடாது. புயலின் நடுவில் காற்றின் வேகம் குறையும். ஆனால் அது புயல் கடந்து சென்றுவிட்டது என்பதற்கான அறிகுறி அல்ல. புயல் கடந்ததாக ரேடியோ மூலம் வானிலை ஆய்வு மைய அறிவிப்பு வந்த பிறகே வெளியே வர வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

புயல் கடந்த பின் கவனத்தில் கொள்ள வேண்டியவை பற்றிய வழிமுறைகளும் விளக்கப்பட்டு உள்ளன. முறிந்த மின் கம்பங்கள், மரங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம். தொற்று பரவும் அபாயம் உள்ளதால் காய்ச்சிய நீரை பருக வேண்டும். ஈரமாக இருக்கும்பட்சத்தில் மின்சாதனப் பொருட்களை இயக்க வேண்டாம்.  கட்டிடங்கள் சேதம் அடைந்திருந்தால் அதை சீர் செய்யும் பணிகளில் ஈடுபட வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.