டில்லி,

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக சசி அதிமுக, ஓபிஎஸ் அதிமுக என இரு அணிகளாக பிரிந்து உள்ளது.

இந்நிலையில் தற்போது ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் காரணமாக அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலையை பெற இரு அணிகளும் போராடி வருகின்றனர்.

தேர்தல் ஆணையம்  22ந்தேதி (நாளை) இறுதி முடிவை தெரிவிப்பதாக கூறியுள்ள நிலையில், ஓபிஎஸ் அணியினர், தங்களுக்கு ஆதரவாக அதிமுகவின் 6000 நிர்வாகிகள்  உள்ளதாக பிரமாண பத்திர்ம் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளனர்.

மேலும்,  சுமார் 43 லட்சம் அதிமுக உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு உள்ளதால், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்துள்ளது.

இந்நிலையில், சசிஅதிமுக தரப்பினரும் இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து நாளை இரு தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டும், இருதரப்பு ஆவணங் களையும் ஆய்வு செய்த பின்பு இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவிக்கும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை, அதிமுக வில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக  இரட்டை இலை முடக்கப்படும் என்று பகிரங்கமாக கூறினார்.

இதன் காரணமாக இரட்டை இலை முடக்கப்படும் என்பது தெளிவாக தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.