சென்னை: கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக பல்வேறு வதந்திகள் உலவி வருகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களுக்கு சுகாதாரத்துறை விளக்கம் அளித்து உள்ளது.

நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. தமிழகத்தில் முதல்கட்டமாக முன்னுரிமை அடிப்படையில்  முன்நகளப் பணியாளர்களான மருத்துவ, சுகாதாரப் பணியாளர்கள் 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு உள்ளது.

இதுவரை தடுப்பூசி போட  4 லட்சத்து 89 ஆயிரத்து 556 பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. அடுத்தகட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 50 வயதுக்கு கீழ், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற இணைநோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.  இந்த பணிகள் முடிவடைந்த பின்பு தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பம் தெரிவித்து பதிவு செய்துகொள்பவர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசிகள் தொடர்பாக  பல்வேறு சந்தேகங்களுக்கு தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என மத்திய அரசின்கீழ் செயல்படும் ஒழுங்குமுறை அமைப்பினால் உறுதிசெய்த பின்பே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சுயவிருப்பத்தின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்படும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருந்தாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறிகள் விடுபட்டதில் இருந்து 14 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவர்கள் தடுப்பூசி முகாமுக்கு வருவதால் மற்றவர்களுக்கும் நோய்த்தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கும்.

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி, மற்ற வளர்ச்சி அடைந்த நாடுகளை போலவே பயனுள்ளதாக இருக்கும்.

முன்னுரிமை உள்ளவர்களுக்கு தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

மற்றவர்களுக்கு, இணையத்தில் பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்த பின்னர் தடுப்பூசி போடப்படும்.

கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யவேண்டியது கட்டாயம் ஆகும்.

தடுப்பூசிக்கு பதிவு செய்யவும், தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்பு அரைமணி நேரம் சுகாதார மையத்திலேயே அமர்ந்திருக்க வேண்டும்.

ஏதேனும் அசவுகரியத்தை உணர்ந்தால் சுகாதார அலுவலர்கள், கிராம சுகாதார செவிலியர்களிடம் தெரிவிக்க வேண்டும். மற்ற தடுப்பூசிகள் போன்று, பொதுவான எதிர்மறை நிகழ்வுகளான லேசான காய்ச்சல், வலி போன்றவை சிலருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகளில் உடனடியாக சிகிச்சை அளிக்க தயாராக இருக்க அனைத்து டாக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

புற்றுநோய், நீரிழிவுநோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்களுக்காக சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமாகும்.

கொரோனா தடுப்பூசியின் வரவு குறைவாக இருப்பதால், முதலில் முன்னுரிமைபடுத்தப்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும்.

தடுப்பூசியின் உற்பத்தி நிலையைப் பொறுத்து, தேவையின் அடிப்படையில் அனைவருக்கும் வழங்கப்படும்.

28 நாட்கள் இடைவெளியில் 2 தவணையாக தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.

2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 வாரங்களுக்கு பிறகு, பாதுகாக்கும் அளவிலான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே மதுரையில் கொரோனா தடுப்பூசி குறித்து மதுரையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

தமிழகத்தில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட 4 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களது சொந்த விருப்பத்திற்கேற்ப தடுப்பூசி போடப்படுகிறது. பல மருத்துவ பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தானாக முன்வந்துள்ளனர். தமிழகத்திற்கு முதற்கட்டமாக 5 லட்சத்து 56 ஆயிரம்தடுப்பூசிகள் வந்துள்ளன. இது அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து கொடுக்கபட்டுள்ளது.

முன்கள பணியாளர்கள் தடுப்பூசிக்காக வருகிற 25-ந்தேதி வரை இணைய தளத்தில் பதிவு செய்யலாம். மேலும், தடுப்பூசிகளை இருப்பு வைக்க பிரத்யேகமாக நடமாடும் குளிசாதன பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன. தடுப்பூசி போட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவர். தடுப்பூசி போட்டவர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தடுப்பூசியை விஞ்ஞான ரீதியாக அணுக வேண்டும். தடுப்பூசியால் பின்விளைவு இல்லை என தெரிவிக்கபட்டுள்ளது. எனவே அது தொடர்பாக பயப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.