கோவை:

2018 -19ம் ஆண்டுக்கான பா.ம.க. வேளாண் நிழல் நிதி நிலை அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் : ராமதாஸ் வெளியிட்டார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:

 

1. தமிழ்நாட்டில் நீர்ப்பாசனத் திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தி வேளாண்மையை பெருக்குவது, வேளாண் விளைபொருட்களுக்கு லாபம் ஈட்டும் வகையில் கொள்முதல் விலையை நிர்ணயிக்க தனி ஆணையம் அமைப்பது, விளைபொருட்களை கொள்முதல் செய்ய தனி வாரியம் அமைப்பது, உழவர்களுக்கு மூலதன மானியம் வழங்குவது ஆகியவை தான் 2018-19ஆம் ஆண்டு வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையின் மையக்கரு ஆகும். இந்த நிதிநிலை அறிக்கை முழுமையாக செயல்படுத்தப்பட்டால் உழவர்கள் வாழ்வில் வசந்தம் மலரும் என பா.ம.க. நம்புகிறது.

2. 2018-19 ஆம் ஆண்டு நீர்ப்பாசன சிறப்பாண்டாக கடைபிடிக்கப்படும்.

3. 2018-19 ஆம் ஆண்டு முதல் 2021-22 வரை நீர்ப்பாசன நான்காண்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். ஆண்டுக்கு ரூ.25,000 கோடி வீதம் 4 ஆண்டுகளில் ரூ. 1 லட்சம் கோடி செலவிடப்படும். இதன்மூலம் தமிழகத்தின் பாசனப் பரப்பை இப்போதுள்ள 26.79 லட்சம் ஹெக்டேரிலிருந்து 50 லட்சம் ஹெக்டேராக அதிகரிப்பது தான் இந்த திட்டத்தின் இலக்கு மற்றும் நோக்கம் ஆகும்.

புதிய பாசனத் திட்டங்கள்

4. நீர்ப்பாசன நான்காண்டுத் திட்டத்தின்படி முதல் கட்டமாக 2018-19-ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளதிட்டங்களின் விவரம் வருமாறு:

* திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்குப் பயனளிக்கும் அத்திக்கடவு – அவினாசித் திட்டம் ரூ.3523 கோடி செலவில் மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.3,000 கோடி ஒதுக்கப்படும்.

* காவிரி, -சரபங்கா நதி, -திருமணிமுத்தாறு இணைப்புக் கால்வாய் கிட்டத்தட்ட 170 கி.மீ. நீளம் கொண்டது ஆகும். இந்தத் திட்டத்தால் 30,154 ஏக்கர் நிலம் நேரடியாக பாசன வசதி பெறும். மேலும். நிலத்தடி நீர் ஆதாரம் மேம்பாடு அடைவதன் மூலம் 18,228 ஏக்கர் பாசன வசதிபெறும். இத்திட்டத்திற்கு மொத்தம் ரூ.1500 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* பாலாறு பாசனத் திட்டம்: பாலாற்றில் வீணாகும் நீரை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நல்லாத்தூர், ஆலப்பாக்கம், பழவேலி, பாலூர், திருமுக்கூடல் ஆகிய பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்படும். அடுத்தகட்டமாக காஞ்சிபுரம் வட்டம் பெரும்பாக்கம்; உத்திரமேரூர் வட்டம் திருமுக்கூடல்; செங்கல்பட்டு வட்டம் ஆலப்பாக்கம்; மதுராந்தகம் வட்டம் எல்.என்.புரம் என, நான்கு இடங்களில் தடுப்பணை கட்டப்படும். இத்திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்படும்.

* தாமிரபரணி – நம்பியாறு இணைப்புத் திட்டம்: தாமிரபரணி ஆற்றில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 13 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. தாமிரபரணி ஆறு, கருமேனி ஆறு, நம்பியாறு, பச்சையாறு, கோரையாறு, எலுமிச்சையாறு ஆகிய ஆறு நதிகளை இணைப்பதன் மூலம், வீணாகும் தண்ணீரை தேக்கி ராதாபுரம், நாங்கு நேரி, சாத்தான்குளம் பகுதிகளுக்கு கால்வாய் மூலம் கொண்டு சென்று பாசனத்திற்காக பயன்படுத்தலாம். இத்திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம்: கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் வறுமையைப் போக்குவதற்காக 69 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட திட்டம் தான் காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகும். காவிரி, அக்கினியாறு, கோரையாறு, பாம்பாறு, வைகை, குண்டாறு ஆகிய நதிகளை இணைப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். ரூ.4500 கோடி இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

* தென்பெண்ணை – துரிஞ்சலாறு இணைப்பு:நந்தன் கால்வாய் திட்டத்தின் நீர் ஆதாரமாக திகழ்வது துரிஞ்சலாறு ஆகும். துரிஞ்சலாறு ஒரு காட்டாறு என்பதால் மழைக்காலத்தில் மட்டும் நந்தன் கால்வாயில் தண்ணீர் வரும். இது நந்தன் கால்வாயை நம்பியுள்ள பல லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு இந்த தண்ணீர் போதுமானதல்ல. நந்தன் கால்வாய் திட்டம் முழுமையான பயனளிக்க வேண்டுமானால், தென்பெண்ணையாற்றுடன் நந்தன் கால்வாயை இணைப்பது தான் சிறந்த வழியாகும். இதற்காக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

* கொள்ளிடத்தில் தடுப்பணை:காவிரியின் கிளை நதியான கொள்ளிடத்தில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டப்பட வேண்டும் என்பது அரசின் நிலைப்பாடு ஆகும். மொத்தம் 110 கி.மீ. நீளம் கொண்ட கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 10 தடுப்பணைகளை அமைக்கலாம்.

* காவிரியில் தடுப்பணை: காவிரி மற்றும் அதன் கிளை நதிகளான அரசலாறு, திருமலைராஜன் ஆறு, குடமுருட்டி ஆறு, வெண்ணாறு, வெட்டாறு, கல்லணைக் கால்வாய் ஆகியவற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரில் பெரும்பகுதி வீணாகக் கடலில் கலப்பதை தடுக்கும் வகையில் தடுப்பணைகள் கட்டப்படும்.

* 56 டி.எம்.சி தண்ணீரை சேமிக்க தடுப்பணைகள்:கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம், வெள்ளாறு, கெடிலம் ஆறு, தென்பெண்ணையாறு, மணிமுத்தாறு ஆகிய 5 ஆறுகள் கடலில் கலக்கின்றன. இந்த ஆறுகளில் தடுப்பணைகளை கட்டுவதன் மூலம் 56 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க முடியும்.

* தமிழகத்தில் தூர்ந்து போன, ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகள் கண்டறியப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.

5. வேளாண்மையை லாபம் ஈட்டும் தொழிலாக மாற்ற கீழ்க்கண்ட அம்சங்களைக் கொண்ட சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

* வேளாண்மைக்குத் தேவையான அனைத்து இடுபொருட்களையும் வேளாண்மை மூலதன மானியம் இலவசமாக வழங்குதல்.

* வேளாண் விளைப்பொருட்களுக்கு நியாயமான விலை வழங்குதல்.

* கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாகப் பெற்றுத் தருதல்.

* கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் வாங்கிய பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில், பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடன் சுமையிலிருந்தும் உழவர்களை விடுவித்தல்.

* இயற்கைச் சீற்றங்களால் விவசாயம் பாதிக்கப்படும்போது, அதன் பாதிப்பு விவசாயிகளைத் தாக்காத வகையில், பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தி இழப்பீடு வழங்குதல்.

6. உழவர்கள் கடன் சுமையில் சிக்குவதை தவிர்க்கவும், வேளாண்மையை இலாபம் தரும் தொழிலாக மாற்றவும், சிறு, குறு உழவர்களுக்கு மூலதன மானியம் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த அரசு திட்டமிட்டிருக்கிறது.

7. மூலதன மானியத் திட்டத்தின்படி ஒவ்வொரு சிறு, குறு விவசாயிக்கும் ஒரு ஏக்கருக்கு, ஒரு பருவத்திற்கு ரூ.5,000 வீதம் ஆண்டுக்கு இரு பருவங்களுக்கு ரூ.10,000 மானியம் வழங்கப்படும். இதை அரசுக்கு திரும்பச் செலுத்தத் தேவையில்லை-. இதன் மூலம் உழவர்களுக்கு உரம், விதை, பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட இடுபொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற பா.ம.க.வின் வாக்குறுதி நிறைவேற்றப்படும்.

8. 2018-19 ஆம் ஆண்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.12,500 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும்.

9. உழவர்களின் நலன் கருதி பயிர்க்கடனுக்கு 10% வட்டி மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப் படும். அதன்படி ரூ.1 லட்சம் கடன் வாங்குபவர்கள் ரூ.90,000 திருப்பிச் செலுத்தினால் போதும்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீட்டுத் திட்டம்

10. வறட்சியால் உழவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் போக்கும் வகையில் நிவாரணத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

அ. வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும்.

ஆ. கரும்புக்கு ஏக்கருக்கு ரூ.90,000 வீதமும், நிலக்கடலைக்கு ரூ.25,000 வீதமும் இழப்பீடு வழங்கப்படும்.

இ. பிற பணப்பயிர்களுக்கு அவற்றின் சந்தை மதிப்புக்கு ஏற்ப ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும்.

ஈ. நிலமற்ற ஏழைத் தொழிலாளர்கள், நிலம் இருந்தும் வறட்சி காரணமாக சாகுபடி செய்யாத சிறு, குறு விவசாயிகள் ஆகியோருக்கு ஒருமுறை உதவியாக ரூ.25,000 நிதியுதவி வழங்கப்படும்.

ஊ. வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களின் கூட்டுறவுப் பயிர்க்கடன்கள் எந்த நிபந்தனையும் இன்றி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

பொதுத்துறை வங்கிக்கடன் தள்ளுபடி

11. பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களில், மூலதனக் கடன்கள் தவிர ரூ.22,000 கோடி பயிர்க்கடன்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்படும். இந்த தொகையை பொதுத்துறை வங்கிகளுக்கு வட்டியுடன் சேர்த்து 5 சம தவணைகளில் தமிழக அரசு வழங்கும்.

வேளாண் விளைபொருட்கள் விலை நிர்ணய ஆணையம்

12. விவசாயிகளுக்கு போதிய கொள்முதல் விலை கிடைக்கும் வகையில் தமிழகத்தில் விளையும் அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் மாநில அரசே விலை நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் அமைக்கப்படும்.

13. வேளாண் விளை பொருள் விலை நிர்ணய ஆணையத்தில் மாநில நிதித்துறை, வேளாண்துறை, உணவுத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுடன் ஊழவர் சங்கப் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள்.

14. பயிர்களின் உற்பத்திச் செலவை கணக்கிட்டு, அத்துடன் 50 விழுக்காடு இலாபம் சேர்த்து, கொள்முதல் விலையை விளைபொருள் விலைநிர்ணய ஆணையம் தீர்மானிக்கும்.

வேளாண் விளைபொருள் கொள்முதல் ஆணையம்

15. தமிழ்நாட்டில் உள்ள உழவர்களுக்கு அதிக இலாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அனைத்து வகை உணவுதானியங்களுக்கான கொள்முதல் விலையை மாநில அரசே நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும்.

16. 2018-19 ஆண்டில் ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.4,970ஆக நிர்ணயிக்கப்படும். தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு வேளாண் விலை பொருள் கொள்முதல் வாரியம் மூலமாகவே உழவர்கள் கரும்பு வழங்கமுடியும். கரும்பு கொள்முதல் செய்யப்பட்ட 30 நாட்களில் கொள்முதல் வாரியம் மூலமாகவே உழவர்களின் வங்கிக் கணக்கில் கொள்முதல் விலை வரவு வைக்கப்படும்.

17. 2018-19 ஆம் ஆண்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.2,811 என நிர்ணயிக்கப்படும்.

வேளாண் துறையில் 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்

18. தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படவிருக்கும் நீர்ப்பாசன பெருந்திட்டங்கள், வேளாண் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், கூட்டுறவு உணவகங்கள், நீரா விற்பனை நிலையங்கள் ஆகியவற்றின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் இளைஞர்களுக்கு நல்ல ஊதியத்துடன் கூடிய வேலை கிடைக்கும். வேலை தேடி நகரப்பகுதிகளுக்கு இடம்பெயர்வது தவிர்க்கப்படும்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி இல்லை

19. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசின் அனுமதி இல்லாமல் செயல்படுத்த முடியாது என்று மத்திய அரசே அறிவித்திருக்கிறது. அத்திட்டத்திற்கு நெடுவாசல் மக்களும், உழவர் அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், இத்திட்டத்திற்கு அனுமதி அளிப்பதில்லை என்று தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

20. தமிழ்நாட்டில் எண்ணூர் – நாகப்பட்டினம், நாகப்பட்டினம் – மதுரை, நாகப்பட்டினம் – தூத்துக்குடி, திருவள்ளூர் – பெங்களூர் ஆகிய 4 வழித்தடங்களில் 1,175 கிலோமீட்டர் நீளத்திற்கு எரிவாயு குழாய்ப் பாதை அமைக்க இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இத்திட்டத்தால் விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்பதால் இதற்கு அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும்.

21. இத்திட்டத்தை மாற்றியமைத்து விளைநிலங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் செயல்படுத்த இந்தியன் ஆயில் நிறுவனம் முன்வந்தால், அதற்கு அனுமதி தருவது குறித்து அரசு ஆராயும்.

22. கேரள மாநிலம் கொச்சியிலிருந்து, கர்நாடக மாநிலம் மங்களூருக்கு சேலம், கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வழியாக எரிவாயுக் குழாய் பாதை அமைக்கும் திட்டமும் வேளாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அத்திட்டத்தின் பாதையையும் மாற்றி அமைக்கும்படி மத்திய அரசை, தமிழக அரசு கேட்டுக்கொள்ளும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

23. தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காவிரிப் பாசன மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகியவையும், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்படும்.

24. இந்த மாவட்டங்களில் பூமிக்கு அடியில் மீத்தேன் உள்ளிட்ட எரிவாயுக்களும், கனிமங்களும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவற்றை எடுப்பதற்காக வேளாண் விளை நிலங்களை நாசமாக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் முயற்சிகள் முறியடிக்கப்படும்.

25. வேளாண் வருமானத்தை பெருக்கத் திட்டம்: உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.25,000 மானியம் வழங்குதல், நிலங்களின் அளவுக்கு ஏற்ப உறுதி செய்யப்பட்ட வருமானம் கிடைக்க வகை செய்தல், துல்லிய பண்னைத் திட்டத்தின்  மூலம் வருவாயை பெருக்குதல், உழவர்களுக்கு கடன் வழங்க நபார்டு வங்கியில் தனி அமைப்பை ஏற்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள்.

26. வருவாய் வாய்ப்புகளை விரிவாக்க வேளாண்மையை மறுவரையறை செய்தல்: விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு, மீன்வளர்ப்பு, கடலோரப்பயிர் வளர்ப்பு, பால்பொருள் உற்பத்தி, கோழி வளர்ப்பு ஆகியவற்றை செய்தல், தோட்டக்கலை பயிர்களை பயிரிடுதல், மதிப்பு கூட்டு பணிகளை செய்தல் ஆகியவற்றின் மூலம் வேளாண்மையை லாபம் தரும் தொழிலாக மாற்றுதல்.

27. வேளாண்மையை தொழில் வடிவமாக்குதல்: நவீன தொழில்நுட்பம், எந்திரமயமாக்கல், அறிவியல் அடிப்படையிலான பண்ணை மேலாண்மை ஆகியவற்றின் மூலம் அதிக விளைச்சல், சிறந்த தரம், தகுதியான விலை ஆகியவற்றுக்கு வழிகோலும் வகையில், வேளாண்மையை ஒரு தொழில்வடிவமாக்குவதே இந்த கொள்கையின் நோக்கம் ஆகும்.

28. தமிழகத்திற்கான நிலப் பயன்பாட்டுக் கொள்கை: சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பெரு நிறுவனங்கள் நிலம் குவிப்பதைத் தடுப்பது, நிலங்களை பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகள், சீரமைக்கப்பட வேண்டிய பகுதிகள், நிலைத்த ஆற்றல் வேளாண்மை  செயல்பாட்டுக்கான பகுதிகள், தொழில்துறை பயன்பாடு மற்றும் வேளாண்மை சாராத பயன்பாட்டுக்கான பகுதிகள் என பிரித்தல், இவற்றில் கடைசி பகுதி தவிர மீதமுள்ள அனைத்துப் பகுதிகளையும் விவசாயத்திற்காக மட்டுமே பயன்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள் ஆகும்.

29. முதல்நிலை வேளாண்மையை மாற்றியமைத்தல்: மண்வள நிலைகுறித்த வரைபடம் தயாரிக்கப்படும், சிறு-குறு நிலங்களின் மண்வளத்தை மீட்டெடுத்தல், அவற்றின் அடிப்படையில் எந்தப் பகுதியில் எந்தப் பயிரை அறிமுகப்படுத்துவது என்பதை தீர்மானித்தல் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

30. விரிவாக்க செயல்பாடுகளை ஊரக வளர்ச்சியுடன் இணைத்தல்: நபார்டு வங்கியால் அமைக்கப்பட்ட ஊரக வணிக நடுவத்தின் மூலம் சந்தை மற்றும் தொழில் நுட்ப வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு முன்னேற்றம் காண்பது தான் இந்த கொள்கையின் அடிப்படை ஆகும்.

31. உணவு தன்னிறைவு: உபரி விளைச்சலை இழப்பாக மாறாமல் தடுத்தல், விலை மாற்றங்களிலிருந்து விவசாயிகளை பாதுகாத்தல், உணவு தானியத்தின் விலைகள் நியாயமாக நிர்ணயிக்கப்படுவதை உறுதி செய்தல் ஆகியவையே உணவு தன்னிறைவை ஏற்படுத்துவதற்கான உத்திகளாக இருக்கும்.

32. ஊரக பொருளாதார மறுமலர்ச்சிக்கான மும்முனைத் திட்டம்: சிறப்பு வேளாண்-பொருளாதார மண்டலங்களை அமைத்தல், கைவினைஞர்களின் தொழிற்பட்டறைத் தொகுப்புகளை அமைத்தல், ஊரகத் தகவல் தொடர்பு முன்முயற்சிகள் ஆகியவையே வளர்ச்சிக்கான மும்முனை திட்டங்கள்