டில்லி

பிரபல மருந்து நிறுவனமான டாக்டர் ரெட்டி ஆய்வகம் இந்தியாவில் ரஷ்ய கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட ஆய்வு நடத்த அனுமதி கோரி உள்ளது.

உலகெங்கும் உள்ள பல நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டறிவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.   இந்தியாவில் தற்போது 2 நிறுவன தடுப்பூசிகள் மனித சோதனையில் உள்ளன.   ரஷ்யாவில் கண்டறியப்பட்டுள்ள ஸ்புட்னிக் வி என்னும் கொரோனா தடுப்பூசி இதுவரை ரஷ்யாவில் 40000 பேருக்குச் சோதனை செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்யா தெரிவிக்கிறது.

ஸ்புட்னிக் வி என்னும் இந்த மருந்தை ரஷ்யாவின் கமலேயா தேசிய ஆய்வு நிறுவனம் மற்றும் ரஷ்ய நேரடி நிதியுதவி நிறுவனம் ஆகியவை இணைந்து உருவாக்கி உள்ளன.  இந்த நிறுவனத்துடன் இந்தியாவின் புகழ்பெற்ற மருந்து தயாரிக்கும் நிறுவனமான டாக்டர் ரெட்டி ஆய்வகம் இந்தியாவில் சோதனை செய்யவும் விநியோகம் செய்யவும் ஒப்பந்தம் இட்டுள்ளது,

இந்நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் அலுவலகத்துக்கு ஸ்புட்னிக் வி மருந்தின் மூன்றாம் கட்ட மனித ஆய்வு இந்தியாவில் நடத்த அனுமதி கோரி உள்ளது.  இந்த மருந்து சோதனை நடந்து இந்திய அரசு ஒப்புதல் பெற்ற பிறகு ரஷ்யா இந்தியாவுக்கு 10 கோடி டோஸ்கள் அளிக்கும் என டாக்டர் ரெட்டி ஆய்வகம் தெரிவித்துள்ளது.