சென்னை: தமிழக சட்டமன்றத்தில், அரசு வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்டவரைவு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த மசோதாவை தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தி மசோதா நிறைவேற்றப்பட்டது.

கடந்த 23-ஆம் தேதி  தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்  தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அது தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. நாளையுடன் கூட்டத்தொடர் முடிவடையும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மாலை சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இதையடுத்து,  இன்று பிற்பகலும் சட்டசபை நடைபெறும் என சபாநாயகர் அறிவித்தார்.  இன்று காலை நகைக்கடன் ரத்து, சுயஉதவிக் குழுவினரின் கடன் ரத்துஎன பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,   பிற்பகல் 3 மணிக்கு அவை கூடியதும், வன்னியர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் உள்ஒதுக்கீடு செய்யும் சட்ட வரைவு மசோதாவையும் தாக்கல் செய்தார். அப்போது பேசிய முதல்வர்,  வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு தற்காலிகமானதே.. 6 மாதங்களுக்குப் பின் மாற்றி அமைக்கப்படும் என கூறினார்.

தற்போது வழங்கப்பட்டு வரும 20% இடஒதுக்கீட்டில், சீர் மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடு மீதமுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளதால், சட்டப்பேரவை கூட்டத்தொடரை இன்றே முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.