சென்னையில் டிரைவிங் லைசென்ஸ் பெற விண்ணப்பித்தவர்களுக்கு புகைப்படம் எடுத்த ஒருமணி நேரத்தில் டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து போக்குவரத்து அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் டிரைவிங் லைசென்ஸ் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு புகைப்படம் எடுத்த ஒருமணி நேரத்தில் டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை கமி‌ஷனர் சமயமூர்த்தி, “வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை போக்குவரத்து துறை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக போட்டோ எடுத்த ஒரு மணி நேரத்தில் டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகமும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் இனி டிரைவிங் லைசென்ஸ் மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பத்துடன் இனி தடையில்லா சான்றே இணைக்க வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்தார்