ஸ்ரீபெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால் ஐபோன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் நிறுவன தொழிற்சாலை அமைந்துள்ளது.  இங்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் ஒப்ப்ந்த முறையில் தயாரிக்கப்படுகின்றன.  இங்கு தயாரிக்கப்படும் ஐபோன்கள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கொரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக இங்கு பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.   ஊரடங்கு அமலாக்கத்தாலும் தொழிலாளர் கொரோனா தொற்றாலும் இங்கு ஐபோன் உற்பத்தி மிகவும் பாதிப்பு அடைந்துள்ளது.  குறிப்பாக ஐபோன் 12 ரக போன்கள் உற்பத்தி 50%க்கும் மேல் குறைந்துள்ளது.

ஏற்கனவே உலக அளவில் ஐபோன் தயாரிப்புக்களுக்குத் தேவையான மைக்ரோசிப்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.   இதனால் மற்ற நாடுகளில் ஐபோன் உற்பத்தி குறைந்துள்ள நிலையில் தமிழகத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   கொரோனா தாக்கத்தால் மேலும் பல பன்னாட்டு நிறுவனங்களும் பாதிப்பு அடையலாம் என அஞ்சப்படுகிறது.