சென்னை: தமிழகத்தில் உள்ள மொத்த டாஸ்மாக் மதுபான கடையின் விற்பனை 19 சதவீதமாக சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுநோயால் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் காரணமாக டாஸ்மாக் நடத்தும் மதுபானக் கூடங்கள், கிளப்புகள் மற்றும் அனைத்து விளையாட்டு அரங்கங்கள் மார்ச் 31 வரை மூடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி அறிவித்தார்.

அதே நேரத்தில் அனைத்து கல்வி நிலையங்கள் வரும் மார்ச் 31ம் தேதி வரை மூடவும் அவர் உத்தரவு பிறப்பித்தார். தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்கள், கிளப்புகள் மூடப்பட்டு உள்ளதால், அதன் வருவாய் குறைந்து விட்டதாக அதிகாரிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.

அதாவது, மொத்த டாஸ்மாக் மதுபான கடையின் விற்பனை 19 சதவீதம் என்ற அளவுக்கு சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாள் ஒன்றுக்கு சுமார் 1 கோடி ரூபாய் விற்பனை சரிவை கண்டுள்ளதாக கூறப்படுகிறது.