டில்லி

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி காரணமாக ஏர் இந்தியாவின் பங்குகள் விற்பது கடினமாக ஆகலாம் எனக் கூறப்படுகிறது.

உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது.   உலகெங்கும் சுமார் 3200க்கும் மேற்பட்டோரை பலி வாங்கிய கொரோனா வைரஸால் சுமார் 90000 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் உலக நாடுகள் பலவற்றுக்கு வெளிநாட்டவர் வர பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.  பல விமானச் சேவை நிறுவனங்கள் தங்கள் சேவைகளைக் குறைத்துக் கொண்டுள்ளன.

இந்திய அரசின் விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா கடும் நஷ்டத்தில் இயங்கி வருவதால் இதன் பங்குகளை முழுமையாக விற்க அரசு முடிவு எடுத்துள்ளது.   அத்துடன் அன்னிய முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தின் 1005 பங்குகளை வாங்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.  இந்த பங்குகளை வாங்க முதலில் பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டிய போதிலும் விலை காரணமாக முடிவு எடுக்கப்படாமல் இருந்தது..

இந்நிலையில் சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (ஐ ஏ டி ஏ) கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் விமான சேவை நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சம் காரணமாக சுமார் 2930 கோடி டாலர் அளவுக்கு வருவாய் இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.   சுற்றுலாப்பயணிகள் பலரும் வெகுவாக குறைந்ததாலும் பல நாடுகளில் வெளிநாட்டவர் வரத் தடை விதிக்கப்பட்டதாலும் இந்நிலை ஏறிஅப்ட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐ ஏ டி ஏ தற்போதுள்ள நிலையில் விமானச் சேவை நிறுவனங்களின் வருவாயில் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளதால்   ஏர் இந்தியாவின் பங்குகள் விற்பனை மிகவும் கடினமாக இருக்குமெனத் தெரிவித்துள்ளது.  கொரோனா வைரஸ் அச்சம் தீரும் வரையில் ஏர் இந்தியாவின் பங்குகளை இந்திய அரசால் விற்பனை செய்ய முடியாது எனச் சங்கத்தின் தலைமை பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்