சவுதியை விட்டு சப்தமின்றி ஓட்டமெடுக்கும் பெண்கள்
சவுதியை விட்டு சப்தமின்றி ஓட்டமெடுக்கும் பெண்கள்

குழந்தைகள்போல் நடத்தப் படுவதால் மனம் நொந்து தாய்நாட்டை விட்டு வெளியேறும் பெண்கள். சவூதி அரேபியாவால் அதன் பெண்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியுமா?

கடந்த மாதம் சவுதியின் இரண்டு பெரிய வங்கிகள் மற்றும் தடாவுல் (Tadawul) எனும் சவுதி அரசின் பங்குச் சந்தை ஆகியவற்றிற்கு பெண்கள் நியமனம் செய்யப்பட்டது மூலம், ஒரு பெண்ணின் எதிர்கால வாழ்க்கை குறித்த குறிக்கோளை அடைவதை முற்றிலும் தடை செய்ய இயலாது எனும் நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், சவுதியில் இன்றளவும் பெண்களின் வாழ்க்கை மிகுந்த கட்டுப்பாடுகளுடனும் , துயரம் நிரம்பியதாகவும் இருப்பதால், நாட்டை விட்டு வெளியேறும் பல வழிகளைக் கண்டுபிடித்து அமைதியாகவும், இரகசியமாகவும் பெண்கள் வெளியேறி வருகின்றனர்.

குடும்பத்தினருடன் வெளிநாடு சுற்றுலா செல்லும் பெண்கள், குடும்பத்தின் பிடியிலிருந்து தப்பி ஓடிவிடுகின்றனர். அரசாங்கத்தின் உதவித்தொகையுடன் மேற்கத்திய பல்கலைக்கழகங்கள் அனுப்பப்பட்டுள்ள பெண்கள் பலரும் தன் தாய்நாடு திரும்புவதை முடிந்த அளவு காலவரையின்றி ஒத்தி வைத்து விடுகின்றனர்.
சவுதிப் பெண்கள் தப்பிக்க, அவர்களை பெயருக்குத் திருமணம் செய்து வெளிநாட்டிற்கு தேனிலவிற்காக அழைத்துச் சென்று கழட்டி விடத் தயாராய் இருந்து உதவ முன்வரும் ஆண்களுக்கு மவுசு அதிகரித்து வருகின்றது. இவ்வாறு செய்யும் ஆண்கள் பெரும் பணம் மட்டுமின்றி இலவசமாய் பெண்ணையும் அனுபவித்துக்கொள்ளலாம் என்பது அவர்களுக்குக் கூடுதல் போனஸ். ஆன்லைன் திருமணச் சேவைகளைப் பயன்படுத்தி இத்தகைய ஆண்களை வலைவீசிப் பிடித்து பேரம் பேசி, நாட்டைவிட்டுத் தப்பிக்க சவுதி பெண்கள் திட்டமிட்டு செயல்படுகின்றனர்.

ரியாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நிர்வாகியாகப் பணிபுரியும் இமான், திருமணம் செய்து வெளிநாடு அழைத்துச் சென்று தப்பிக்க உதவ தன்னிடம் $ 4,000 ஒப்பந்தம் செய்ய ஒரு ஆண் சம்மதித்தார். நான் தப்பிக்க என்னை ஆஸ்திரேலிய தேனிலவு அழைத்து செல்லத் தயாராய் இருப்பதாக அவர் என்னைத் தொடர்பு கொண்டார்” என்றார் சர்வசாதாரணமாக.

இவ்வாறு பெண்கள் தப்பிக்க காரணம், சவுதி அரசாட்சியில் பின்பற்றப் படும் விலாயா( Wilaya) எனப்படும் பாதுகாவலர் சட்டமாகும். பாலினம் காரணமாகப் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் மறுக்கும் உலகின் ஒரே நாடு சவுதி அரேபியா தான்.
இது மட்டுமின்றி, சவுதியில், பெண்கள் நடமாடுவது மிகுந்த கண்காணிப்பிற்கு உட்பட்டது ஆகும். பெண்கள் வெளியே செல்லக் கடுமையான தடையை விதிக்கிறது அந்நாட்டின் சட்டம்.

பயணம் செய்ய, வேலை அல்லது ஆய்வு பணிக்குச் செல்ல, வெளிநாடு செல்ல, மருத்துவமனையில் சிகிச்சை பெற அல்லது ஒரு அடையாள அட்டை பெற, சிறைவாசம் முடித்து விடுதலை ஆகும் பெண் என யாராக இருந்தாலும், அவள் குடும்பத்தின் ஆண் உறுப்பினர் அல்லது காப்பாளர் (வாலி, vally) ஒப்புதலோடு தான் நடமாட முடியும்.

பிறப்பிலிருந்து இறப்புவரை, அவர்கள் ஒரு வாலியின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். அது, தந்தை, கணவர், இவர்கள் இருவரும் இறந்துவிட்டால், தன் குடும்பத்தில் உள்ள நெருங்கிய ஆண் உறவினரிடம் ஒப்படைக்கப்படுவர். சில நேரங்களில், பெண்களை விட சிறிய சிறுவர்களிடம் அவர்கள் ஒப்படைக்கப்படுவர். ஏனெனில், பருவவயதை எட்டிவிட்டால் சிறுவர்கள் கூடப் பெரியவர்களாய் கருதப் படுவர். ஆனால், பெண்களோ குழந்தைப் பருவம் முதல் சாகும் வரை ஒரு ஆணின் கட்டுப்பாட்டில் தான் வாழ வேண்டும்.

இமான் வயது 34 தன் கணவரிடமிருந்து மணவிலக்கு பெற்று தன்னை விடப் பாதி வயதான தன் தம்பி (17 வயது)யின் பாதுகாவலில் வாழ்கின்றார். தன் தம்பி தன்னை ஒரு மருத்துவமனையின் மேலாளராகப் பணிபுரிய அனுமதித்துள்ளதாகவும் ஆனால், தான் சம்பாதிக்கும் பெரும் பகுதியை அவரது தம்பி போதை வஸ்துக்கள் உட்கொள்வதற்கும், வாரந்தோறும் அண்டை நாடான பஹ்ரைன் சென்று அழகுநிலையங்களில் (மசாஜ் சென்டர்) செலவழித்து தீர்த்து விடுவதாகவும் கண்ணீருடன் கூறினார்.

அவரது முன்னாள் கணவர் அவரைத் தன் குழந்தைகளைப் பார்க்க அனுமதிக்க மறுப்பதாக வேதனையுடன் குறிப்பிட்டார். இவரின் சகோதரர் இவரை ஐரோப்பா சென்று தன் படிப்பைத் தொடர அனுமதிக்கவில்லை. எதிர்த்துக் கேட்டால் அவர் அவளை அடித்து துன்புறுத்துவதாகவும் தெரிவித்தார்.

குடும்பத்தில் கொடுமை படுத்துவதாகச் சொல்லி மகளிர் காப்பகம் செல்லலாம் என்றால் அங்கு நிலைமை படுமோசம். பெண்கள் விடுதிகளின் ஜன்னல்கள் மூடப்பட்டே இருக்கும். யாரும் பார்வையாளர்கள் வந்து சந்திக்கத் தடை எனக் கிட்டத்தட்ட ஒரு சிறைச்சாலையை ஒத்திருக்கின்றன சமூக அடைக்கல இல்லங்கள்.”
சவுதியிலிருந்து ஆண்டுதோறும் ஆயிரம் பெண்கள் ஓடிவிடுவதாக அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.

ரீயாத்திலிருந்து தப்பித்து செல்லும் பெண்கள், சவுதி அரசாட்சியில் தாராளவாத கொள்கைகளைப் பின்பற்றும் கடலோர பெருநகரமான “ஜித்தா”வையே அடைக்கலமாகத் தேர்ந்தெடுக்கின்றனர்.

பாதுகாவலர் சட்டம் காரணமாகச் சவூதி அரேபியா ஏழை நாடாக மாறிவருகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டில் படிக்க 150,000 மாணவர்கள் சவுதி அரசு அனுப்பிவைக்கின்றது. அதில் பாதிக்கும் பேற்பட்டவர்கள் பெண்கள். பல பெண்கள், நாடு திரும்புவதில்லை. துபாய் போன்ற தாராளவாத இடங்களிலும் தேர்வு செய்து சென்றுவிடுகின்றனர். இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் இந்தியமதிப்பில் ரூபாய் 33 ஆயிரம் கோடியை சவுதி அரசு பெண்களுக்காகச் செலவழிக்கின்றது. ஆனால், இந்தச் செலவு ஒவ்வொரு ஆண்டும் வீணடிக்கப் படுகின்றது. இவ்வாறு சவுதியின் திறமையான பெண்களைத் தாய்நாட்டில் தக்கவைக்க முடியாமல் தவிக்கின்றோம்” என சவுதியிலிருந்து சென்று பிரிட்டனில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணிபுரியும் நாஜா-அல்-ஒசைமி( Najah al-Osaimi ) தெரிவித்தார்.