பரிமலை

நேற்று சபரிமலையில் கடும் கூட்டம் இருந்ததால் பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்துள்ளனர்.

தற்போது சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகள் நடந்து வருகின்றன.  தினமும் ஏராளமான பக்தர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகின்றனர்.  சபரிமலை நடைதிறந்து ஒரு மாதம் ஆகவுள்ள நிலையிலும் கடந்த 3 வாரங்களாகப் பக்தர்கள் அதிக அளவில் வந்தனர்.  ஆயினும் நீண்டநேரம் வரிசையில் காத்திருக்காமல் எளிதில் தரிசனம் செய்து சென்றனர்.

நேற்று சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. இந்த மண்டலக் காலத்தில் முதல் முறையாக மிக அதிக அளவில் பக்தர்கள் குவிந்ததால் நேற்று தரிசனத்துக்கு நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 18ம் படி முதல் சரங்குத்தி வரை பக்தர்கள் வரிசையில் காத்து நின்றனர்.

காலை 8 மணிக்கு வரிசையில் நின்ற பக்தர்களால் மாலை 6 மணிக்குப் பின்னரே தரிசனம் செய்ய முடிந்தது.  காவல்துறையினர் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து பம்பை உள்பட பல்வேறு பகுதிகளில் பக்தர்களைத் தடுத்து நிறுத்தி கட்டம் கட்டமாக அனுப்பி வைத்தனர்.

இணையம் மூலம் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு முன்பு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால்  நேற்று பக்தர்களின் வருகை அதிகரித்ததை தொடர்ந்து அனைத்து பக்தர்களும் ஒரே வரிசையில்தான் செல்ல முடிந்தது. அது மட்டுமின்றி இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றும் ஏராளமான பக்தர்கள் தற்போது குவிந்து வருகின்றனர். கூட்ட நெரிசலையொட்டி பக்தர்களைக் கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.