பாரிஸ்

சிரியாவில் குர்துக்கள் மீது  தாக்குதல் நடத்தும் துருக்கிக்கு ஆயுத விற்பனையை பிரான்ஸ் நிறுத்த உள்ளது.

சிரியாவின் வடபகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் குர்து இன போராளிகளைக் குறிவைத்து, துருக்கி ராணுவம் கடந்த 9ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் அந்த பகுதிகளில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளனர்.  பல உலக நாடுகள் துருக்கியின் இந்த தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயார் என அறிவித்தார்.   சிரியா மீதான துருக்கியின் தாக்குதல் கடும் கண்டனத்துக்கு உரியது என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், சிரியா மீதான தாக்குதலில் பயன்படுத்தப்படலாம் என்ற காரணத்தினால் துருக்கிக்கான ஆயுத விற்பனைக்குத் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வரும் 14ம் தேதி நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு சபையில், இந்த விவகாரம் தொடர்பான ஐரோப்பிய நாடுகளின் அணுகுமுறையை ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.