பூமி பூஜையும் போன ஜென்ம பாவமும்.  பா.ஜ.க. எம்.பி. புலம்பல்

உத்தரபிரதேச மாநிலம் உன்னவோ மக்களவை தொகுதி பா.ஜ.க. எம்.பி.யான சாக்ஷி மகராஜ், அயோத்தியில் ராமர் கோயில் அமைவதற்கு போராடிய சாமியார்களில் முக்கியமானவர்.

அயோத்தியில் நேற்று நடந்த ராமர் கோயில் பூமி பூஜையில் கலந்து கொள்ள சாமியார் மகராஜ், அழைக்கப்படவில்லை.

பாபர் மசூதியை இடித்த வழக்கில் இவரும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

’’பூமி பூஜைக்கு உங்களுக்கு ஏன் அழைப்பு வரவில்லை?’’ என்று கேட்டபோது, சாக்ஷி மகராஜ், அழாத குறையாக புலம்பி தீர்த்து விட்டார்.

‘’அயோத்தி போராட்டம் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பமானது அல்ல. 500 வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கிய போர். எத்தனை பேர் உயிரை தியாகம் செய்தார்கள் என்பதற்கு கணக்கே இல்லை.

அயோத்தியில் 1990 ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களின் சடலங்களை சரயு ஆற்றில் நான் தூக்கிப்போட்ட நிகழ்வுகள் ஞாபகத்துக்கு வருகிறது.

ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சியை நேரலையில் பார்த்தேன். ராமர் கோயிலுக்கான எந்த  போராட்டத்திலும் கலந்து கொள்ளாத பலரது முகங்களை நிகழ்ச்சியில் காண முடிந்தது. அவர்கள் போன பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். போன பிறவியில் நான் புண்ணியம் செய்யவில்லை. அதனால் தான் எனக்கு அழைப்பு வரவில்லை என நினைக்கிறேன்’’ என வேதனையுடன் கூறுகிறார், சாக்ஷி மகராஜ்.

-பா.பாரதி.