சென்னை

சென்னையில் பெய்து வரும் மழையின் காரணமாக வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்துள்ளன.

தமிழகத்தில் பல்வகை பாம்புகள் வாழ்ந்து வருகின்றன. நமது மாநிலத்தில் வருடத்துக்கு சுமார் 3000 பேர் பாம்புக் கடியினால் மரணம் அடைந்து வருகின்றனர். இவ்வாறு பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக சிகிச்சைக்கு எடுத்து வர வேண்டியது அவசியமாகும். அவ்வாறு இல்லையெனில் மரணம் அடைய நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. பல கல்வி  நிலையங்களில் பாம்புக் கடி சிகிச்சை குறித்த நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சென்னை நகரினுள் பல இடங்களில் பாம்புகள் வசித்து வருகின்றன. குறிப்பாக இவற்றில் பலவகை பாம்புகள் விஷப்பாம்புகள் ஆகும். இவை புதர்கள் மற்றும் நீர் நிலை ஓரங்களில் உள்ள செடி கொடிகளின் இடையே வசித்து வருகின்றன. அது மட்டுமின்றி புதிய கட்டுமானங்கள் கட்டும் போது அடுக்கப்படும் கற்கள் மற்றும் செங்கற்களின் இடையிலும் வசித்து வருகின்றன.

சமீப காலமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. எனவே இந்த பாம்புகள் வீடுகளில் புகுந்து விடுகின்றன. இதையொட்டி நகரின் பல பகுதிகளில்  இருந்து சென்னை வனவிலங்குத் துறை அலுவலகத்துக்குத் தினமும் குறைந்தது 8 முதல் 10  தொலைப்பேசி அழைப்புக்கள் வந்த வண்ணம் உள்ளன. வனவிலங்குத் துறையினர் உடனடியாக சென்று பாம்புகளைப் பிடித்து வருகின்றனர். இந்த பாம்புகளில் நாகப்பாம்பு உள்ளிட்ட பல விஷப் பாம்புகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.