சென்னை: இலட்சியவாதியின் வரலாறு தெரிந்திருக்க நியாயமில்லை  என்று, தான் அதிருப்தியில் இருப்பதாக  செய்தி வெளியிட்ட பத்திரிகைக்கு துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.

திமுக தலைமைமீது, திமு பொருளாளர் துரைமுருகன் அதிருப்தியில் இருப்பதாக தினமலர் நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது. இது திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், துரைமுருகன் தரப்பில், காட்டமாக அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில்,  “ஆளுங்கட்சிக்குப் பல்லக்குத் தூக்கி; அமைச்சர்களுக்குக் கவரி வீசி – ஆதாயம் தேடும் தினமலர் நாளிதழுக்கு இலட்சியவாதியின் வரலாறு தெரிந்திருக்க நியாயமில்லை”  என காட்டமாக தெரிவித்து உள்ளார்.

தான் ஒருபோதும் பதவியை எதிர்பார்த்து தி.மு.க.விற்கு வரவில்லை என்றும்,  பொதுச்செயலாளர் பதவிக்கு தி.மு.க.வில் கலகம் ஏற்படுத்த முயற்சிக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளவர், பதவிகள் கிடைக்காவிட்டாலும் திமுகவின் அடிமட்ட தொண்டனாக இருந்து கோஷமிடுவேன். ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவன் நான்” எனவும் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.