புதுடெல்லி:

மக்களவை தேர்தலையொட்டி,
ஏப்ரல் 7-ம் தேதி வரை பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ. 500.1 கோடி மதிப்புள்ள போதை வஸ்துகள் பறிமுதல் செய்யப்பட்டு நாட்டிலேயே முதல் இடத்தை குஜராத் பிடித்துள்ளது.


அடுத்ததாக, ரூ.398.11 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு தமிழகம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. ரூ.185.68 கோடி கைப்பற்றப்பட்டு ஆந்திர மாநிலம் மூனறாவது இடத்திலும், ரூ.151.36 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உத்திரப்பிரதேச மாநிலம் நான்காவது இடத்திலும் உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மக்களவை தேர்தலையொட்டி நாடு முழுவதும் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகை, மதுபானங்கள், போதை வஸ்துகளின் மதிப்பு விவரம்:

குஜராத் மாநிலத்தில் ரூ. 8 கோடி மதிப்புள்ள மதுபானங்களும், ரூ.500.1 கோடி மதிப்புள்ள போதை வஸ்துகளும், ரூ. 77 லட்சம் மதிப்புள்ள வெள்ளி,தங்கமும் என மொத்தம் ரூ.513 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு நாட்டிலேயே குஜராத் முதல் இடத்தை பிடித்துள்ளது.

தமிழகத்தில் பணமாக ரூ.160.39 கோடியும், ரூ.1.73 கோடி மதிப்புள்ள மதுபானங்களும்,ரூ.27 லட்சம் மதிப்புள்ள போதை வஸ்துகளும் ரூ.228.85 கோடி மதிப்புள்ள வெள்ளி ஆபரண தங்கமும், இலவசமாக கொடுக்க கொண்டு சென்ற ரூ.6.87 கோடி மதிப்புள்ள பொருட்களும் என மொத்தம் ரூ.398.11 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆந்திராவில் ரூ.114.18 கோடி பணமும், ரூ.22.89 கோடி மதிப்புள்ள மதுபானங்களும்,ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை வஸ்துகளும், ரூ.32.97 கோடி மதிப்புள்ள வெள்ளி, ஆபரண தங்கமும், இலவசமாக கொடுக்க கொண்டு சென்ற ரூ.6.87 கோடி மதிப்புள்ள பொருட்களும் என மொத்தம் ரூ.185.68 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

உத்திரப்பிரதேசத்தில் ரூ.30.17 கோடி பணமும், ரூ.37.68 கோடி மதிப்புள்ள மதுபானங்களும்,ரூ.23.12 கோடிமதிப்புள்ள போதை வஸ்துகளும், ரூ.60.39 கோடி மதிப்புள்ள வெள்ளி, ஆபரண தங்கம் என மொத்தம் ரூ.151.36 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பணம் மற்றும் நகைகள் என மொத்தம் ரூ.4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.