நெல்லை:  தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை எளிமையாக்கப்படும்  என கூறியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வர உடனடி இ-பாஸ் வழங்கப் படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு செய்ய 2 நாள் சுற்றுப்பயணமாக தென்மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  நேற்று திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆய்வு நடத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பின்னர், சிறு- குறு – நடுத்தர தொழில்துறை கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், மகளிர் சுய உதவி குழு பிரதிநிதிகளையும் தனித்தனியே சந்தித்தார்.

பின்னர்  மாலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை கள் குறித்து  மருத்துவர்கள் , செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை பிரதிநிதிகளுடன் ஆலோ சனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  முதல்வர், தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கைகள் மூலம் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நெல்லையில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினர். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வரிடம் இ.பாஸ் நடைமுறையில் உள்ள சிக்கல், முறைகேடுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்தவர்,  இ-பாஸ் நடைமுறையில் ஊழல் நடைபெற கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு மிக கண்டிப்புடன் உள்ளது என்று கூறியவர், தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை எளிமையாக்கப்படும், உண்மையான காரணங்களை கூறி இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

இங்கு பணிபுரிந்த வெளிமாநில தொழிலாளர்களை அரசு செலவில் அவர்களது மாநிலத்துக்கு அனுப்பி வைத்தோம். இப்போது அவர்கள் தமிழகத்துக்கு வந்து பணி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். அப்படி அவர்கள் வர விரும்பினால் முகவரி கொடுத்தால் அரசு பரிசீலனை செய்து இ–பாஸ் வழங்கும். அப்படி அவர்கள் இங்கு வரும்போது நேரடியாக மருத்துவமனைக்கு செல்லப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்படும். அந்த பரிசோதனையில் அவருக்கு பாசிட்டிவ் வந்தால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படும். ‘நெகட்டிவ்’ இருந்தால் அவர்கள் பணி செய்ய தடை இல்லை.

உங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வேண்டும் என்றால், அவரது விவரம், முகவரியுடன் கலெக்டரிடம் கொடுத்தால் அடையாள அட்டை வழங்கப்படும். மாதம் ஒரு முறை இந்த அடையாள அட்டையை புதுப்பிக்க வேண்டும்.

இ–பாஸ்

இ–பாஸ் வழங்குவது எளிமையாக்கப்பட்டுள்ளது. இ–பாஸ் வழங்குவதற்காக மாவட்டங்களில் மேலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மேலும் ஒரு குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிக்கு செல்வோருக்கு தடையின்றி இ–பாஸ் வழங்கப்படுகிறது.

இந்தியாவிலேயே அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழ்நாடு என்று  பெருமிதத்துடன் தெரிவித்தவர், தென் மாவட்டங்களில் புதிதாக தொழில் தொடங்க முன் வந்தால் நிலத்தின் மதிப்பீட் டில் பாதி மானியமாக வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.