மார்ச் 08, இன்று சர்வதேச மகளிர் நாள்.  பெண்கள் உடல்நலம் குறித்த கட்டுரை இது.

உலகிலேயே அதிகளவில் மனித உடம்பிலிருந்து அகற்றப்படும் உறுப்பு எது தெரியுமா ? கையோ, கால்களோ, கிட்னியோ அல்ல, பெண்களின் கர்பப்பை தான் உலகிலேயே அதிகளவில் அறுவை சிகிச்சைமூலம் அகற்றப்படும் உறுப்பு ஆகும் இதனை ஹிஸ்டணெரக்டமி‘ (Hysterectomy) என்பர். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தால், கர்ப்பப்பையில் ஏற்படும் புற்று நோயும் ஒரு காரணமாகும்.

ஏதோ ஒரு காரணத்திற்காகக் கருக்கலைப்பு செய்ய முடிவெடுக்கும் பெண்கள், அதற்குரிய முறையான சிகிச்சை மேற்கொள்வதில்லை. சரியாகச் செய்யப்படாத கருகலைப்புகள் பின்னர் புற்று நோய்கட்டிகளின் உருவாக்கத்திற்கு காரணமாகிவிடுகின்றன. கிராமப் பகுதியில் இது போன்ற பாதிப்புகள் அதிகம் இருக்கின்றன. . கருக்கலைப்பு மட்டுமல்ல மாதவிடாய் சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய சுகாதார முறைகள்பற்றிய விழிப்புணர்வும் இல்லாததே காரணம். மாதவிடாய்க்கு துணிகளைப் பயன்படுத்தும் பழக்கமே அதிகமாக உள்ளது ஆனால் அவற்றை தூய்மையாகப் பயன்படுத்தும் முறைகள் தெரியவில்லை. இவைத்தவிர, பெண்கள் புகை பிடித்தாலும், 15 வயதிற்கு முன்னரே உடலுறவில் ஈடுபட்டாலோ, கணவருக்குப் பலப் பெண்களுடன் தொடர்பு இருந்தாலோ, பெண்களுக்குக் கர்ப்பப் பை வாய் புற்றுநோய் ஏற்படும். குழந்தை பெறாத பெண்கள், 55 வயதிற்குப் பின் மெனோபாஸ் கட்டத்தை அடைபவர்கள் ஆகியோரும் கருப்பை புற்று நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம்.

 

உலக சுகாதார அமைப்பின் கருத்துபடி இந்தியாவில் 12 பெண்களில் ஒருவருக்கு கருப்பை புற்று நோயோ அல்லது மார்பகப் புற்று நோயோ ஏற்படுகிறது. இது நான்கு கட்டமாக வளர்ச்சி அடைகின்றது. ஆரம்பக் கட்டத்திலேயே அடையாளம் கண்டுவிட்டால், ஈளிதில் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். இல்லையெனில், உயிருக்கே ஆபத்தாய் முடியலாமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

  • முதல் கட்டம்: கருப்பையின் உள்பக்கம் மட்டுமே பாதிக்கப்படும்.
  • இரண்டாம் கட்டம்: கருப்பை சார்ந்த மற்ற பகுதிகள் பாதிக்கப்படும் உ-ம், ஃபெலோபியன் குழாய்கள்.
  • மூன்றாம் கட்டம்: கருப்பைக்கு வெளியேயும் பாதிப்புகள் இருக்கும் உதாரணம், பெல்விஸ் பகுதிகள்.
  • நான்காம் கட்டம்: கருப்பையை சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்படும் உதாரணம், சிறுநீரகம், கல்லீரல் ஆகியன.

கனடிய மற்றும் அமெரிக்க புற்றுநோய் சங்கங்களின் அறிக்கையின்படி:
உலக அளவில், மரணத்தை விலைவிக்கும் முக்கியக் காரணி புற்று நோய் ஆகும். வாய்ப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஆகியவற்றுக்கு ஆண்களும், மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு, பெண்களும், அதிகம் ஆளாவதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கனடாவில் ஏற்படும் மரணங்களில் 30% புர்றுநோயால் ஏற்படுகின்றது.
கனடாவில், “கர்ப்ப்பை வாய் புற்றுநோயால் 2800 புதிய நோயாளிகள் பாதிப்பப்பட்டும், 1750 நோயாளிகள் மரணமடைந்தும் உள்ளனர். 2016ல், அமெரிக்காவில் 22.280 புதிய நோயாளிகள் பாதிக்கப் பட்டும் 14.240 மரணங்களும் ஏற்பட்டுள்ளன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழக்கிறார்கள் என்றால் அது இந்தியாவில்தான். சென்னையில் வசிக்கும் பெண்களில், 30 பேரில் ஒருவர், அவர்களின் வாழ்நாளில், இந்நோய்க்கு ஆளாகின்றனர்.

ஒழுங்கற்ற மாதவிடாய், அடிவயிற்றில் வீக்கம், முதுகிலும் இடுப்பிலும் வலி, சில சமயம் அடிவயிற்றில் சுரீரென்று உருவாகும் வலி, சிறுநீர் பிரச்சினைகள் ஆகியன
ஆரம்பகால குறியீடுகளாக இருக்கலாம். இவை உணர்ந்து கொள்ள முடியாத வகையிலும் இருக்கும். ஏனென்றால், வலியை உணர்வதும், பொறுத்துக் கொள்வதும் ஒருவருடைய சகிப்புத்தன்மையை பொறுத்தது. நீங்களே கவனித்திருக்கலாம், சிறிய காயத்திற்கு கூச்சல் போடுபவர்களும் உண்டு, பெரிய அடிபட்டிருந்தாலும் அமைதியாகப் பொறுத்துக் கொள்பவரும் உண்டு. பொதுவாகவே பெண்களுக்கு வலியைப் பொறுத்தமட்டில் சகிப்புத்தன்மை அதிகம் என்பதால் (பிரசவ வலியையே பொறுத்துக் கொண்ட அனுபவம்தான்…) இவற்றை எளிதில் கண்டுணர மாட்டார்கள். மேலும், குடும்ப நலத்தையே பெரிதாக நினைத்துக் கொண்டிருப்பதால் அவர்களிடம் ஏற்படும் மாற்றங்களை உணரமாட்டார்கள். எனவே, ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிக்க முடிவதில்லை. தொடர்
விழிப்புஉணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

‘கர்ப்பப்பையின் கீழ்ப் பகுதியானது, பிறப்பு உறுப்பில் இணையும் இடத்தில் வாய் போன்ற அமைப்பில் ‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ என்ற கிருமியால் புற்றுநோய் ஏற்படுகிறது. பொதுவாக வைரஸ் கிருமி தாக்குதலின்போது பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தியே, இதை எதிர்த்து வெற்றிகொள்கிறது. சில பெண்களுக்கு இந்தக் கிருமி சில காலத்துக்கு உடலுக்குள்ளேயே அமைதியாகக் காத்திருந்து நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள காலத்தில் தாக்குதல் நடத்துகிறது. இந்த நிலையில், இயல்பான செல்களில் மாற்றம் ஏற்படுகிறது. மாற்றம் அடைந்த இந்தச் செல்கள் அதிவேகத்தில் பெருக்கம் அடைகிறது. இவை இறப்பதும் இல்லை.

இதில் கொடுமையான விசயம், கருப்பை வாய் புற்றுநோய் அமைதியாகவும் சப்தமின்றியும் வலரும் தன்மை உடையது, மேலும், ஒரு நம்பகமான பரிசோதனை இதுவரை எதுவும் இல்லை. அப்படியே அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதனை வேறு வியாதியென நினைத்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். எனவே, இந்த வியாதி மூன்றாம் கட்டத்தை அடைந்த பிறகே பெரும்பாலும், அதாவது, வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் கட்டிகள் (எரிச்சல் கொண்ட குடல் நோய்) ஆகியவை தோன்றும் போதே மருத்துவர்கள் இந்த நோயைக் அடையாளம் காண்கின்றனர்.

இவைத் தவிர, ரத்தத்துடன் கலந்த வெள்ளைப்படுதல், உடலுறவுக்குப் பின் ஏற்படும் ரத்தப் போக்கு, மாதவிடாய் இல்லாத நேரங்களில், திடீரென ரத்தப்போக்கு ஏற்படுவது ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள் ஆகும். ஈஸ்ட்ரோஜன் அளவில் ஏற்படும் மாற்றங்கள்தான் அடிப்படை காரணம். இது போன்ற ஹார்மோன் குறைபாடு மனக்கவலை மற்றும் பதட்டத்தை அதிகரிக்கிறது. சிறிய விசயங்களுக்குக் கவலைபடுவார்கள், சந்தேகப்படுவார்கள், குறை சொல்ல ஆரம்பிப்பார்கள். எப்போதும் சோர்வுற்ற மன நிலையில் இருப்பார்கள். உணவு எடுத்துக் கொள்ளும் அளவு குறைய ஆரம்பிக்கும். மாதவிடாய் சமயத்தில் சோர்வு, வெளுத்த முகம், களைப்பு ஆகியவை வழக்கத்திற்கு மாறாக அதிகரிக்கும். சிலர் மன நோயாளிபோல் நடந்து கொள்வார்கள். கூச்சலிடுவது, காரணம் இல்லாமல் அழுவது, சண்டைபிடிப்பது போன்றவை இருக்கும் ஒருவருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால், அதன் அறிகுறிகள் ஏதும் வெளியே தெரியாது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் முற்றிய நிலையை அடைய 10 ஆண்டுகள் ஆகும். இதனால்தான் குறிப்பிட்ட கால இடைவெளியில் டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம். மெனோபாசுக்குப் பிறகு உதிரப்போக்கு இருந்தால் நிச்சயம் டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். 9 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.

ஒரு மகப்பேறு மருத்துவமனையில் பணிபுரியும் பெயர்  குறிப்பிடவிரும்பாத ஊழியர் “புற்றுநோய்க்குக் காரணமான 16, 18, 6 மற்றும் 11 என நான்கு வகை வைரஸ் தாக்கத்திலிருந்தும் காப்பாற்றும் ஊசிக்கு ‘குவாட்ரி  வேலன்ட் வேக்சின்’ என்று பெயர். இதற்கான செலவு ஒரு டோஸுக்கு  ₹ 2,800 முதல்₹  3500 வரை.  நோயை உண்டாக்குவதில் பிரதான இடம் வகிக்கிற 16 மற்றும்  18 வைரஸ் தாக்கத்தைத் தடுக்கும் ‘பை வேலன்ட் வேக்சின்’, ஒரு டோஸ் போட ₹ 2,500 முதல் ₹ 3500 வரை செலவாகும்” என்று கூறினார்.

புதிய ஆராய்ச்சிகள், ஆரம்ப கட்ட கருப்பை புற்றுநோய் அறிகுறிகள் என்ன என்பதையும், பெண்கள், கூர்ந்து கவனிக்க வேண்டிய கருப்பை புற்றுநோய் அறிகுறிகள் நான்கினை வரிசைப் படுத்தியுள்ளன:
1. தொடர்ந்து வீக்கம்:
அடிக்கடி அடிவ்யிறு வீங்கினாலோ, மூன்று வாரங்களுக்கு மேல் தொடர்ந்து வீக்கம் இருந்தால் கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். கருப்பை புண்கள் காரணமாக, உள்ளே உருவாகியுள்ள கட்டிகளுக்கு ஒருவிதத்தில் காரணமாகின்றன. திடீரென்று அடிவயிற்றில் வலி ஏற்பட்டு துடிப்பார்கள். ஓய்வெடுத்த சற்று நேரத்திலேயே சரி ஆகிவிடும்.

2. அடிவயிற்றில் மற்றும் இடுப்பு வலி:
மாதவிடாயின் போது பொதுவாய் ஏற்படும் வலி, மாதவிடாய் நின்றபிறகும் தொடர்ந்து வலி இருந்தால் (மூன்று வாரங்கள் அல்லது அதற்கு மேல் வலி தென்பட்டால்) கருப்பை புற்றுநோயின் ஒரு அடையாளமாக இருக்க வாய்ப்பு உள்ளது. மெனோபாஸ் எனும் மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களைவிட, 40 வயதிற்குட்பட்ட பெண்களைத் தாக்கும் அபாயம் அதிகம்.
அசாதாரணமான நாற்றத்துடன் வெள்ளைப்படுதல். அது பச்சை நிறம் கலந்தும், அரிப்புடனும் வெளிப்படுதல். அப்படி இருந்தால் அந்தத் தொற்றுக்கு உடனடியாக மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். அலட்சியப்படுத்தினால், அது பெரிதாகி, நாளடைவில் செல்களைப் பாதித்து, புற்றுநோய்க்குக் காரணமாகலாம்.

3. உணவு உண்ண முடியாமை, பசியின்மை:
நீங்கள் இனி மூன்று வாரங்களுக்கு மேலாகப் பெண்கள், எப்பொழுதும் சாப்பிடும் அளவு உணவைச் சாப்பிட முடியாமல் திணறினால், பசியை உணரமுடியவில்லை என்றால், வயிறு, குடல், மற்றும் குடல் பிரச்சினைகளின் அடையாளமா மட்டுமில்லாமல், அது புற்றுநோயின் அறிகுறியாயும் இருக்க வாய்ப்பு உள்ளது.

4. அதிகரித்த சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியம்:
பெண்கள் திரவ உணவு உட்கொள்ளுவதில் எந்த மாற்றங்களும் இல்லாது போதிலும், கழிவறைக்கு அடிக்கடி செல்ல நேர்ந்தால், கருப்பை புற்றுநோயின் ஆரம்ப நிலை இருக்கலாம். எனவே, உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

உள் உறுப்புகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்வது, பேறு காலத்திலும், அதற்குப் பின்பும், தகுந்த உடல் பராமரிப்பை மேற்கொள்வது, மாதவிடாயின்போது, சுத்தமான துணிகளைப் பயன்படுத்துவது, 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், கர்ப்பப்பை புற்றுநோயை உறுதி செய்யும், “பேப் ஸ்மியர்’ பரிசோதனையைத் தவறாமல் செய்து கொள்வது.ஆகியவை கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் சில வழிமுறைகளாகும். இது இரு வலியில்லா எளியச் சோதனையாகும். இதற்கு ஆகும் செலவு ₹ 200 முதல் ₹ 800 வரை. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைக்கு வரக்கூடிய ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்யும் முன்னோடியான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பாப்ஸ்மியருக்கு பதில் வயா/விலி (VIA/VILI) மற்றும் ஸ்கால்ஸ்கோப்பி முறையில் பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் மூலம், தமிழ்நாட்டில் கர்ப்பபைவாய் புற்றுநோயால் ஏற்படக்கூடிய உயிரிழப்பு பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இரண்டு ஆண்டு இடைவெளியில் தொடர்ந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பாப்ஸ்மியர் பரிசோதனையில், கர்ப்பப்பை வாயிலுள்ள செல்கள் ஒரு ஸ்லைடில் தேய்த்து எடுத்துப் பரிசோதனைக்கு அனுப்பப்படும். இதில், செல்களின் அபரிமித வளர்ச்சி கண்டறியப்பட்டால், உடனடியாகப் பயாப்சி பரிசோதனை செய்து கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உறுதிபடுத்தப்படும்.

இது தவிர, “லிக்யுட் பேஸ்ட் சைட்டாலஜி’ என்கிற அட்வான்ஸ்டு சோதனையின் மூலம் பாப் ஸ்மியரைவிட துல்லியமாகக் கண்டறியலாம். இதுவும்  வலியில்லாதது. இதற்கான செலவு 1,000 முதல் 1,200 ரூபாய் வரை.

ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், புற்றுநோயைக் குணப்படுத்திவிடலாம் என, மருத்துவர்கள் திரும்பத் திரும்ப சொன்னாலும், இந்நோயால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்துக் கொண்டு தான் உள்ளன. ஒரு அழகான இல்லத்தின் அடிப்படை பெண்தான், தன்னுடைய உடல் கோளாறுகளை வெளியே காட்டிக்கொள்ளாத இந்திய பெண்களுக்குக் குடும்பத்தினரின் கவனிப்பு இருக்க வேண்டியது அவசியம். அவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்தைக் கவனத்தில் கொள்வோம்.

நம்முடைய மனைவியோ, அம்மாவோ, சகோதரியோ 40 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் சற்று கூடுதலாகக் கவனம் செலுத்தி அவருடைய உடல்நலனில் அக்கறை செலுத்த இந்த உலக பெண்கள் தினத்தில் உறுதி ஏற்போம்.