சென்னை;

 கொரோனாவை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான உணவுகளை சாப்பிடுவது அவசியம் என்று தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

இன்று கொரோனா தீவிரமடைந்து வரும் தண்டையார்பேட்டை பகுதியில் ஆய்வு நடத்தியவர், அங்கு நடைபெற்ற  மருத்துவ முகாமுக்கும் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதையடுத்த செய்தியாளர்களை சந்தித்தார்.

முதலில், கொரோனாவால் உயிரிழந்த தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகனுக்கு  2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்.  அதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது,

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கண்டு அஞ்ச வேண்டாம். முக கவசம் அணிவது மட்டுமே கொரோனா வராமல் தடுக்கும் வழி. பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சென்னையில் கொரோனா தொற்று பரிசோதனைகளை அதிகப்படுத்தி இருக்கிறோம்.
 சென்னையில் சராசரியாக நாளொன்றுக்கு 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை பரிசோதனை நடைபெறுகிறது. வீடுதோறும் சென்று ஆய்வு நடத்தப்படுகிறது. கண்ணகி நகர், திடீர் நகரில் நோய்த்தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. சென்னையில் 1,974 குடிசைப் பகுதிகள் கண்டறியப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால்தான் கொரோனா வேகமாக பரவுகிறது. கொரோனாவை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான உணவுகளை சாப்பிடுவது அவசியம்.

நோய் தொற்று பரவாமல் தடுக்க  கபசுரக்குடி நீர், ஜிங்க் மாத்திரைகள் உள்ளிட்டவை வழங்கப்படு கிறது. அலோபதி மருத்துவமும் பின்பற்றப்படுகிறது. 11 வகையான மருத்துவ சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.