லண்டன்: பிரிட்டனில், கொரோனாவால் முடங்கிய ரெஸ்டாரண்ட் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், சாப்பிடுவோரின் பில் தொகையில் பாதியை செலுத்தும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது அந்நாட்டு அரசாங்கம்.

‘உதவி செய்வதற்காக உண்ணுங்கள்’ என்ற பெயரிலான இத்திட்டத்தின்படி, ரெஸ்டாரண்டுகளுக்கு சென்று ஒரு தனிநபரோ, குடும்பமோ அல்லது குழுவோ உண்ணும்போது, அவர்களுக்கு வந்த பில் தொகையில், அவர்கள் பாதியை மட்டுமே செலுத்தினால் போதுமானது. மீதி தொகை, அரசாங்கத்தால் செலுத்தப்படும்.

கொரோனா காரணமாக, ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், மக்கள் வீட்டுக்குள் முடங்கியதன் காரணமாக ரெஸ்டாரண்ட் தொழில்கள் பெரியளவில் சரிந்தன. எனவே, தற்போதைய நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அத்தொழிலை மீட்டெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

இதனால், மக்களை, ரெஸ்டாரண்டுகளை நோக்கி படையெடுக்கச் செய்யும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான், பில் தொகையில் பாதியை அரசே செலுத்தும் திட்டம்!