டெல்லி: வாக்கெடுப்பு நடைபெற உள்ள மாநிலங்களில் கோவிட் சான்றிதழ்களில் இருந்து மோடியின் புகைப்படத்தை அகற்றுமாறு சுகாதார அமைச்சகத்தை தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டு உள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக  நடைபெறுகிறது. மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்தே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. அதன் காரணமாக ஆளும் கட்சிகள் எவ்வித புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது.

இந் நிலையில், கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் மோடியின் புகைப்படம் விதிகளை மீறி இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டை எழுப்பிய திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகாரும் தெரிவித்தது. மோடியின் படம் இடம்பெறுவதற்கு காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழிலில் மோடியின் படம் இடம்பெற்றுள்ளது தொடர்பாக மேற்கு வங்க தேர்தல் ஆணையத்திடம், தலைமை தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது.

மேலும் மோடியின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு விட்டனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் உததரவிட்டு உள்ளது. இதனிடையே, கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழிலில் மோடியின் படம் நீக்கப்பட்டுவிட்டதா இல்லையா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.