டெல்லி; தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை  இன்று மாலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு சட்ட மன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 22ஆம் தேதியும்,  புதுச்சேரி மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஜூன் 4ஆம் தேதியும், கேரள மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 24ஆம் தேதியுடனும், அசாம் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 23ஆம் தேதியும்,  மேற்கு வங்க சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 26ஆம் தேதியுடனும் நிறைவு பெறுகிறது.

இதையடுத்து,  அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலை  நடத்துவது தொடர்பாக  இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழுவினர் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு சென்று ஆய்வுகள் மேற்கொண்டு வந்தனர். மேலும்,  தேர்தல் பணிகளையும் முடுக்கி விடப்பட்டது. அதைத் தொடர்ந்து விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று மாலை  4.30 மணி அளவில் தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் காலியாக கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தமிழக பட்ஜெட் தொடர்  நாளை வரை ( 27ந்தேதி) வரை நடைபெற இருக்கும் நிலையில், இன்று தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.