டெல்லி: தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களை ஓட்டளிக்க வைக்க ஏற்பாடுகள் தயார் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்களை இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் ஓட்டுப்போட வகை செய்ய இயலுமா என்று சட்ட அமைச்சகமானது, தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருந்தது. அதற்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு: தமிழக சட்டசபை தேர்தல் உட்பட அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களை ஓட்டளிக்க வைக்க ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

உரிய சட்ட விதிமுறைகளை கொண்டு வந்தால், அவர்களை ஓட்டளிக்க வைப்பது சாத்தியமான ஒன்று. மின்னணு முறையில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஓட்டளிக்க வைக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் கிட்டத்தட்ட 1 கோடி இந்தியர்கள் உள்ளனர். அவர்களின் 60 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்கும் தகுதியை பெற்றவர்கள். குறிப்பாக, பஞ்சாப், குஜராத் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.