சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டம் 14ந்தேதி கூட உள்ள நிலையில், முதல்வர் உள்பட அனைத்து எம்எல்ஏக் களுக்கும் இன்று கொரோனா சோதனை செய்யப்படுகிறது.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும்  14-ந் தேதி மீண்டும் தொடங்குகிறது. கொரோனா தொற்று காரணமாக 3நாட்கள் மட்டுமே சபை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கலைவாணர் அரங்கத்தின் 3-ம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் சட்டசபை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபையை நடத்துவதற்கு ஏற்ற வகையில் கலைவாணர் அரங்கம் தயார்படுத்தப்பட்டு வருகிறது. 14, 15 மற்றும் 16 ஆகிய 3 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுகிறது.
இந்த நிலையில், சபையில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்படும் என்றும், நெகடிவ் ரிசல்ட் வந்தவர்கள் மட்டுமே சபைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி,  எம்.எல்.ஏக்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. எம்.எல்.ஏக்களின் வீடுகளுக்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுக்கும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.