கர்நாடகாவில் நடைபெற இருந்த 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஒத்திவைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்திருந்த நிலையில், வரும் டிசம்பர் 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தற்போது அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ஆட்சிக்கு நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததால், சுயேச்சை எம்.எல்.ஏக்கள் உள்பட 17 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த நடவடிக்கையை எதிர்த்து 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

தற்கிடையில், கர்நாடகா மாநிலத்தில் காலியாக உள்ள 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட தங்களை அனுமதிக்க வேண்டும் என தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 ஏம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய உச்சநீதிமன்ற விசாரணையின் போது, வழக்கின் விசாரணை முடிவடையாததால் தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இத்தகைய சூழலில், தற்போது டிசம்பர் 5ம் தேதி 15 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அடுத்த மாதம் 22ம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், டிசம்பர் 5ம் தேதிக்குள் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வெளியிடுமா ? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அதேநேரம், தேர்தல் ஆணையத்தின் இந்த திடீர் அறிவிப்பால், கர்நாடக அரசியலில் மீண்டும் பதற்றமான சூழலே நிலவி வருகிறதே.