டில்லி:

என்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக,  சிதம்பரத்திடம் விசாரணை நடத்த டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில்,  நாளை காலை 8.30 மணி அளவில் ப.சிதம்பரத்தை திகார் ஜெயிலில், அமலாக்ககத்துறை மீண்டும் கைது செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதிஅமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள்  கடந்த ஆகஸ்டு மாதம் 21 வீட்டின் சுவர் ஏறி குதித்துச் சென்று கைது செய்தனர்.  அதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக திகார் சிறையில் சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது ஜாமின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில், உச்சநீதி மன்றத்தில் அவரது ஜாமின் மனு மீதான இறுதி விசாரணை நாளை நடைபெற உள்ளது.

இதற்கிடையில், சிதம்பரத்திடம் விசாரணை நடத்த வேண்டும் என்று, அமலாக்கத்துறை சார்பில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, இன்று நீதிபதி அஜய் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு வாதங்களையும் தொடர்ந்து, அமலாக்கத்துறையினர், சிதம்பரத்திடம் திகார் ஜெயிலில்  நாளை 30 நிமிடங்கள் விசாரிக்கலாம் என்றும், விசாரணைக்கு பிறகு தேவைப்பட்டால் ப.சிதம்பரத்தை கைது செய்வது குறித்து அமலாக்கத்துறை முடிவெடுக்கலாம் என்றும் கூறியது.

இதையடுத்து, விசாரணை என்ற பெயரில் அமலாக்கத்துறை தரப்பில்  நாளை சிதம்பரத்தை கைது செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. நாளை காலை 8.30 மணிக்கு ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.