சென்னை:
மிழக முதல்வர் ரூ.281 கோடி மதிப்பிலான தடுப்பணைகள், வெள்ள தடுப்பு சுவர், நீர்தேக்கம், அணைக்கட்டு உள்பட 22 திட்டப் பணிகளுக்கு இன்று காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
சென்னை  தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கண்டரக்கோட்டை கிராமத்தில், பெண்ணையாற்றின் குறுக்கே 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிக்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள 17 மாவட்டங்களில் 247 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 21 திட்டப் பணிகளுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று  அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும், மக்களின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், கிடைக்கப்பெறும் நீரை வீணாக்காமல் நீர்நிலைகளில் தேக்கி வைக்கும் பொருட்டும், புதிய நீராதாரங்களை உருவாக்கிடவும் புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, நீர்வள ஆதாரத் துறை மூலமாக பல்வேறு பாசன மேம்பாட்டுத் திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கண்டரக்கோட்டை கிராமத்தில், பெண்ணையாற்றின் குறுக்கே 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிக்கு முதலமைச்சர் இன்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். புதிதாக கட்டப்படவுள்ள இத்தடுப்பணையின் நீளம் 575 மீட்டர், உயரம் 1.50 மீட்டர் மற்றும் கொள்ளளவு 28.58 மில்லியன் கன அடி ஆகும்.
மேலும், தடுப்பணையின் மேற்புறம் 1500 மீட்டர் மற்றும் கீழ்புறம் 500 மீட்டர் தூரத்திற்கு இருபுறமும் வெள்ளத்தடுப்பு கரைகள் அமைக்கப்படவிருக்கின்றன. இந்த தடுப்பணை கட்டுவதன் மூலம் நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு, நிலத்தடிநீர் மட்டம் வெகுவாக உயரும். இதனால் விவசாய உற்பத்தி அதிகரிப்பதோடு குடிநீரின் தரமும் உயரும். இதனால் இப்பகுதியிலுள்ள 728 ஆழ்குழாய் கிணறுகள் மூலம் 2,912 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
மேலும், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 1,602 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், காட்டூர் தத்தமஞ்ஜி இரட்டை ஏரிகளை இணைத்து, கொள்ளளவினை மேம்படுத்தி, நீர்தேக்கத்தை உருவாக்கிட 62 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டம்:
தடுப்பணைகள்
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், பழைய சீவரம் கிராமத்தில் உள்ளாவூர் அருகில், பாலாற்றின் குறுக்கே 42 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி;
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், எலந்தம்பட்டு கிராமத்தில், கெடிலம் ஆற்றின் குறுக்கே 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி;
கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில், உளுந்தூர்பேட்டை மற்றும் பண்ருட்டி வட்டங்களில், மலட்டாற்றினை தொலைகல் 24,000 மீட்டர் முதல் 40,000 மீட்டர் வரை 15 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தும் பணி;
நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டம், திருநகரி கிராமத்தில், வெள்ளப்பள்ளம் உப்பனாற்றின் குறுக்கே தொலைகல் 21.200 கிலோ மீட்டரில், 30 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடைமடை நீரொழுங்கி கட்டும் பணி;
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உப்பாற்றை சீரமைத்து, உப்பாற்றின் குறுக்கே, குறுக்கு கட்டுமான கட்டமைப்புகளை 14 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி;
தடுப்பு சுவர்
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம், சாத்தக்கோன் வலசை கிராமம், சீனியப்பா தர்கா அருகே மன்னார் வளைகுடா கடலோரப் பகுதியில் 11 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி மற்றும் திருவாடனை வட்டம், முள்ளிமுனை கிராமம் அருகே மன்னார் வளைகுடா கடலோரப் பகுதியில் 4 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி;
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், கெங்குவார்பட்டி கிராமம், புது அணைக்கட்டு வாய்க்காலினை 10 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனப்படுத்தும் பணி மற்றும் போடிநாயக்கனூர் வட்டம், போடிநாயக்கனூர் கிராமம், அணைப்பிள்ளையார் கோவில் அருகில் உள்ள ராஜவாய்க்கால் அணைக்கட்டை புனரமைத்தல் மற்றும் ராஜவாய்க்கால் அணைக்கட்டின் மேல்புறம் மற்றும் கீழ்புறத்தில் 4 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளத் தடுப்புச்சுவர் கட்டும் பணி;
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், திருக்கோவிலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை வட்டங்களில் மலட்டாறு வாய்க்காலினை 0 மீட்டர் முதல் 24000 மீட்டர் வரை 7 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி;
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், நம்பியாற்றின் குறுக்கே கண்ணநல்லூர் கிராமத்தில் 4 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி;
ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், அரக்கன்கோட்டை கால்வாய் மற்றும் கிளை வாய்க்கால்களில் மைல் 1/2 முதல் 20/1 வரையிலான பாசன மதகுகள் 3 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி;
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், நத்தம் கிராமம், திருமணிமுத்தாற்றின் குறுக்கே, காட்டுப் பெரியகுளம் அணைக்கட்டினை 3 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மறுகட்டுமானம் செய்யும் பணி, குஜிலியம்பாறை வட்டம், பாளையம் கிராமம், விராலிப்பட்டி கிராமத்திலுள்ள கசிவு நீர் குட்டையினை 2 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி மற்றும் ஒட்டன்சத்திரம் வட்டம், தங்கச்சியம்மாபட்டி கிராமம் புல எண். 487-ல் நங்காஞ்சியாற்றின் குறுக்கே 1 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணி;
அணைக்கட்டு
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், மதயானைப்பட்டி கிராமம் அருகில் பேராம்பூர் வாரியின் குறுக்கே 2 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அணைக்கட்டு கட்டும் பணி;
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள உடுமலைக்கால்வாய் தொலைகல் 16.600 கி.மீ முதல் 23.170 கி.மீ வரை மற்றும் அதன் பகிர்மானக் கால்வாய்களில் விடுபட்டுள்ள கால்வாயினை 2 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி;
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், திருக்கண்ணமங்கை வாய்க்காலில் உள்ள கட்டுமானங்களை 2 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைத்தல் மற்றும் கரைகளை பலப்படுத்தி புனரமைக்கும் பணி;
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், எஸ்.அம்மாபட்டி மற்றும் வடுகபட்டி கிராமங்களில் (ஸ்ரீ சங்கிலி கருப்பசாமி கோவில் அருகில்) அர்ஜுனா நதியின் குறுக்கே 2 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி;
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்தில் அமைத்துள்ள பரம்பிக்குளம் பிரதானக் கால்வாயினை தொலைகல் 36.00 கி.மீ முதல் 39.50 கி.மீ வரை 2 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மறுசீரமைக்கும் பணி; என மொத்தம் 280 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 22 திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தலைமைச் செயலாளர் க.சண்முகம், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், நீர்வள ஆதாரத் துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் கே.ராமமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.