ஷங்கர் தயாரிப்பில், அறிவழகன் இயக்குநராக அறிமுகமான படம் ‘ஈரம்’. இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தக் கொரோனா ஊரடங்கில் நேரலை மூலமாக பேட்டியொன்று அளித்துள்ளார் இயக்குநர் அறிவழகன். அந்தப் பேட்டியில் ‘ஈரம் 2’ குறித்துப் பேசியுள்ளார்.

” ‘ஈரம்’ வெளியான 10 நாட்களிலேயே, அதன் 2-ம் பாகம் குறித்து யோசனை வந்தது. முதல் பாகத்தைத் தயாரித்த ஷங்கர் சார் தயாரித்தால் மட்டுமே ‘ஈரம் 2’ உருவாகும் என்பது உறுதி.

அவர்தான் என் குரு, என் முதல் படமான ‘ஈரம்’ படம் உருவானதற்குப் பின்னால் இருந்தவரும் அவரே. எனவே, அதன் 2-ம் பாகத்தை எடுத்தால் அதை எஸ் பிக்சர்ஸ் பெயரின் கீழ் மட்டுமே எடுப்பேன். ஷங்கர் சார் தயாரிக்கத் தயாராகும் போது ‘ஈரம் 2’ படத்தை எதிர்பார்க்கலாம். கதை தயாராக இருக்கிறது” என கூறியுள்ளார் .