சென்னை:

ருத்து கேட்பு என்ற பெயரில்  நாடகத்தை நடத்தி திருவாரூர் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் ஆணையம்மீது குற்றம் சாட்டி உள்ளார்.

காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு வரும் 28ந்தேதி வாக்குப்பதிவு என அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வந்தனர். இந்த நிலையில், தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு பல அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

ஜனவரி 28ம் தேதி நடக்க திட்டமிடப்பட்டு இருந்த திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இது தமிழக அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

தேர்தல் அறிவிக்கை வெளியிட்டு தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய பிறகு, கருத்து கேட்பு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தி திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலை ரத்து செய்திருக் கிறது தேர்தல் ஆணையம். இது ஜனநாயக நடைமுறைகளை கேலிக்கூத்தாக்குவதாகும்.

இந்த ஜனநாயக விரோத செயலை ஆளும் அ.தி.மு.க. வுக்கு சாதகமாக செய்ய முயன்றபோதே கண்டித்திருக்க வேண்டிய தி.மு.க.வும் இதற்கு துணைபோனது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தி.மு.க.வுக்கும் தோல்வி பயம் இருந்ததையே இது காட்டியது.

திருவாரூரில் அ.ம.மு.க. வெற்றி பெறும் என்ற கள யதார்த்தத்தை உணர்ந்தே இந்த விஷயத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கைகோர்த்துள்ளன. இதற்கு சரியான தண்டணையை எப்போது தேர்தல் வந்தாலும் இந்த இரண்டு கட்சிகளுக்கும் வழங்க திருவாரூர் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.