சென்னை,

சிகலா நியமனத்திற்கு விளக்கம் கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ். இதன் காரணமாக அவரது முதல்வர் கனவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அ.தி.மு.கவின் பொது செயலாளராக சசிகலா நடராஜன் நியமனம் செய்யப்பட்டது குறித்து, அக்கட்சியிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதிமுகவின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கடந்த ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி மரணம் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து அதிமுகவை சசிகலா  கைப்பற்றினார். அதையடுத்து  அக்கட்சி யின் பொதுசெயலாளராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

 

அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்கு  தாம் அதிமுகவின் பொதுச்செயலராகிவிட்டதாக கடிதம் கொடுத்திருந்தார்.

ஆனால், அவரது பொதுச்செயலாளர் பதவி செல்லாது எனவும்,  அவரது இந்த கடிதத்தை நிராகரிக்க கோரி அதிமுக ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டிருந்தார்.

அதில் கொடுத்திருந்த மனுவில், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டு சசிகலா நடராஜனை பொதுச்செயலராக தேர்வு செய்யவில்லை. ஆகையால் சசிகலா நடராஜனின் நியமனத்தை தேர்தல் ஆணையம் ஏற்க கூடாது; தேர்தல் ஆணையமே அதிமுக பொதுச்செயலர் தேர்தலுக்கான வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இப்புகாரின் அடிப்படையில் சசிகலாவிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

இந்நிநிலையில், அ.தி.மு.கவின் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட வி.கே.சசிகலாவின் நியமனம் செல்லாது என்று கூறி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு புகார் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் எம்.பி சசிகலா புஷ்பா.

இதுகுறித்து விளக்கம் கேட்டு தலைமை தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், சசிகலா நியமனம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக தமிழக முதல்வராக எந்நேரத்திலும் பதவி ஏற்கலாம் என்ற கனவில் மிதந்து வந்த சசிகலாவுக்கு மத்திய அரசு செக் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது தேர்தல் ஆணையத்தின் இந்த கிடுக்கிப்பிடி நோட்டீஸ் காரணமாக அவரது பொதுச்செயலாளர் பதவி கேள்விக்குறியாகி உள்ளது.

இதனால்  மீண்டும் பொதுக்குழு, செயற்குழு கூடி,  உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டு தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் என தெரிகிறது. இதன் காரணமாக அவரது முதல்வர் கனவு தற்காலிகமாக கலைந்துள்ளது என கூறப்படுகிறது.

இந்த தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா உறுதி செய்துள்ளார்.