டெல்லி:

ஆர்.கே நகர் இடை தேர்தலை ரத்து செய்து தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆர்.கே. நகர் இடை தேர்தலில் பணம் பட்டுவாடா குறித்து புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் வருமானவரித்துறையினர் அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் உள்ளிட்டோரிடம் சோதனை நடத்தியது.

அப்போது ஆர்கே நகர் தேர்தலுக்கு வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின. இதில் ஒரு ஆவணம் நேற்று கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் வருமான வரித்துறை சார்பில் தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை இன்று டெல்லியில் நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.

அப்போது லக்கானி, தேர்தல் ஆணையத்திடம் கூடுதல் அறிக்கைகளை சமர்ப்பித்தார். இதனை தொடர்ந்து நஜீம் ஜைதி, ஆர்.கே.நகர் தொகுதிக்கான சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா மற்றும் ராஜேஷ் லக்கானி ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதைதொடர்ந்து ஆர்கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி உத்தரவிட்டதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.