மும்பை

மின்சாரத்தில் இயங்கும் பஸ் சேவை மும்பையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது.   எதிர்காலத்தில் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் மட்டுமே விறக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.   இதையொட்டி மும்பை மாநகராட்சி நிர்வாகத்தால் நடத்தப்படும் பெஸ்ட் குழுமம் மின்சார பஸ் சேவையை தொடங்கி உள்ளது.

நேற்று இந்த பஸ்களின் சேவை வடலா பணிமனையில் துவக்கி வைக்கப்பட்டது.  இந்த துவக்க விழாவில் மும்பை மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர் முன்னிலையில் யுவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே சேவையை துவக்கி வைத்தார்.    மொத்தம் 4 மின்சார பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன.  ஒவ்வொரு பஸ்ஸும் ரூ. ஒரு கோடியே 61 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் வரை செல்லக்கூடிய இந்த பஸ்ஸில் 31 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.  செல்ஃபோன் சார்ஜ் செய்யும் வசதியும் இந்த பஸ்களில் உள்ளது.    மொத்தம் 7 தடங்களில் இந்த பஸ் சேவை இயக்கப்பட உள்ளன.  மும்பையில் மின்சார ரெயிலை உபயோகப்படுத்துவோர் மிக அதிகம்.   அதற்கு அடுத்தபடியாக பஸ்கள் உபயோகப்படுத்தப் படுகின்றன.    பஸ்ஸில் பயணம் செய்வோருக்கு இந்த மின்சார பஸ்கள் மிகுந்த சவுகரியத்தையும் புதிய அனுபவத்தையும் அளிக்கும் என பயணிகள் கூறி உள்ளனர்.