சென்னை:

சென்னையில் மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என்று தமிழக  போக்குவரத்து துறை அமைச்சர்  எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.

தமிழகத்தில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்றும், முதல்கட்டமாக சென்னையில் இயக்கப்பட இருப்பதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில் அனைத்துப் போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.  அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய  போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கப்படுவது குறித்த அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  விரைவில் வெளியிடுவார் என்று கூறினார்.

மேலும், போக்குவரத்து கழகங்களின் ஆலோசனை கூட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுப்படுவதை குறைக்கின்ற வகையில் பெரு நகரங்களில் மின்சார  பேருந்துகளை இயக்க இருப்பது குறித்துஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் இதுவரை   1500 கோடி ரூபாய் செலவில் 5 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு, அவற்றில் 3 ஆயிரத்து 500 பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டு வருவதாகவும், எஞ்சிய ஆயிரத்து 500 பேருந்துகள் விரைவில் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.