டில்லி,

ந்தியாவில் இன்னும் சில ஆண்டுகளில் மின்சார கார்கள் மட்டுமே இயங்கும் என்று மத்திய மின்துறை  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கிரின்பீஸ் நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவுகள் குறித்து பேசிய மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ்கோயல்,  புது திட்டங்கள், மற்றும் வழிகாட்டுதல்களின் படி வரும் 2030 ஆண்டு முதல் இந்தியாவில்  மின்சாரக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும், பெட்ரோல், டீசல் மற்றும் எண்ணைத் தட்டுப்பாடுகள் அடியோடு ஒழிக்கப்படும் என  கூறினார்.

கிரீன்பீஸ் என்ற அமைப்பு நடத்திய ஒரு ஆய்வில், இந்தியாவில் வருடத்துக்கு ஒரு மில்லியன் மக்கள் விஷப்புகை காரணமாக மரணம் அடைவதாக தெரிய வந்துள்ளது.

இந்த மரணத்திற்கு முக்கிய காரணம், வாகனத்தில் இருந்து வரும் புகையே என்பதும்,  2014ல் உலக சுகாதார மையம் நடத்திய ஆய்வில்,  உலகில் காற்று மாசடைந்த 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில் இருப்பதும் கண்டறிய பட்டுள்ளது.

இந்த காற்று மாசடைவதை தடுக்கும் விதமாக  டில்லியில் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, வண்டியின் பதிவு எண் ஒற்றைப்படையா அல்லது இரட்டைப்படையா என்பதை கண்டறிந்து, அதையொட்டி ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்பட்டது.

இந்த மாற்று திட்டத்தின் காரணமாக காற்று மாசு ஓரளவே குறைந்தது.

தற்போது வெளிநாடுகளில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் புழக்கத்திற்கு வந்துகொண்டி ருக்கும் நிலையில், இந்தியாவிலும் இதுபோன்ற எலக்ட்ரிக் வாகனங்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதுபோன்ற  மின்சாரத்தில் இயக்கப்படும் வாகனங்களினால்  காற்று மாசடைவதில்லை என்பதினால், எதிர்காலத்தில்  உற்பத்தி செய்யப்படும் கார்கள் மின்சாரத்தில் இயங்குபவையாக இருத்தல் வேண்டும் என மாசுக்கட்டுப்பாடு வாரியம் பரிந்துரைத்துள்ளது.

எனவே சிறுக சிறுக மின்சார வாகனமாக  மாறுவதன் மூலம் 2030ல் முழுமையாக அனைத்துக் வாகனங்களும் மின்சாரமயமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சுற்றுசூழல் மாசுபடுவதை தவிர்க்க, அசோக் லேலண்டு நிறுவனம் நமது நாட்டிலேயே முழுவதும் தயாரிக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் பேருந்ததை  கடந்த வருடம் அக்டோபர் மாதம் சென்னையில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.