தினக்கூலி வீட்டு  மின் கட்டணம் ரூ. 3 லட்சம்..

கரூர் மாவட்டம் டி.செல்லாண்டிபாளையம் கிராமத்தில் ஒரே ஒரு அறை மட்டும் கொண்ட இல்லத்தில் வசிப்பவர், லிங்கேஸ்வரி.

அங்குள்ள ஜவுளி ஆலையில் தினக்கூலியாக வேலை பார்க்கும் இவரது வீட்டுக்கு வந்த மின் கட்டணம் ரொம்பவும் அதிகமில்லை-

வெறும் 2 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய்.

‘பில்’லை பார்த்த லிங்கேஸ்வரி நிலைகுலைந்து போனார்.

அவருக்குச் சம்பளம் கொடுக்கும் ஆலையின் இரண்டு மாத மின் கட்டணமே, இவ்வளவு அதிகமாக இருந்தது கிடையாது.

அவரது வீட்டில் ஒரு ஃபேன், ஒரே ஒரு விளக்கு மற்றும் பிரிட்ஜ் மட்டுமே பயன்பாட்டில்  உள்ளது .மாவரைக்கும் எந்திரம் இருந்தாலும் அதனை எப்போதாவது மட்டுமே பயன்படுத்துவார்.

ராயனூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு அடித்துப் பிடித்து, ஓடிச்சென்று, தகவல் சொன்னபோது,கணக்கீட்டில்  ஏதோ தப்பு நடந்துள்ளதை உணர்ந்தனர், அதிகாரிகள்.

தவற்றைத் திருத்திக்கொண்டு, லிங்கேஸ்வரிக்கு  168 ரூபாய்க்கு புதிய ரசீது வழங்கிய பின்னரே அவர் மூச்சு விட்டுள்ளார்.

-பா.பாரதி