“மத்திய அரசு வலியுறுத்தும் மின்னணு பணப் பரிவர்த்தனையை  செயல்படுத்த புதுச்சேரி மாநிலத்தில் போதிய கட்டமைப்பு வசதி இல்லை. ஆகவே இதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு ஒப்புக்கொள்ளாவிட்டால், எந்தவித விளைவுகளையும் சந்திக்கத் தயார்” என்று புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
“மின்னணு பணப் பரிவர்த்தனை முறையை செயல்படுத்துவதில், புதுச்சேரி முன்னோடி மாநிலமாக செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவி்ட்டுள்ளது. ஆனால் இதற்கான எந்த கட்டமைப்பு வசதியும் புதுச்சேரியில் இல்லை.
புதுச்சேரியில் கிராமப்பகுதியில் வங்கிகள் ஏடிஎம்கள் இல்லை. பெரும்பாலான கடைகளில் பண அட்டை பயன்படுத்தும் ஸ்வைப் இயந்திரம் இல்லை.
எனவே பண அட்டை மூலம் பணம் பரிவர்த்தனை செய்வதை முழுமையாக நிறைவேற்ற முடியாது.படிப்படியாகத்தான் நிறைவேற்ற முடியும் என முடிவெடுத்துள்ளோம். எங்கள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும்.
இப்பிரச்னை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசி மூலம் பேசினேன். புதுச்சேரி மாநிலத்தில் நீங்கள் சொல்லும் காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற முடியாது. எங்களுக்கு காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் எனத் தெரிவித்து விட்டேன். இதனால் வரும் எந்த விளைவாக இருந்தாலும் சந்திக்க தயார் ” என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.