டில்லி: 

சென்னை நுங்கம்பாக்கத்தில்  உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரித்துறையின் இன்று மீண்டும் சோதனை நடத்தினார். ஏற்கனவே பலமுறை சோதனைகளை நடத்தப்பட்டுள்ள நிலையில் இன்று மீண்டும் சோதனை நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வருமான வரித்துறை சோதனை குறித்து கருத்து தெரிவித்த, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இன்றைய சோதனை,   அமலாக்கத்துறையால் நடத்தப்படும் ஒரு திட்டமிட்ட நாடகம் என்றும், எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் கூறி உள்ளார்.

ஏர்செல் மாக்சிஸ் முறைகேடு வழக்கில் அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் கம்பெனி பயன்அடைந்ததாக  குற்றம்சாட்டப்பட்டது. அதையடுத்து அவர்மீது வழக்கு பதிவு செய்து, பல முறையே அவரது அலுவலகம், வீடுகளில் சோதனை நடைபெற்றது.

இந்நிலையில் இன்று மீண்டும் டில்லி மற்றும் சென்னையில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளில் சோதனை நடைபெற்றது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சிதம்பரம், சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் இருந்து நேற்று நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். இந்த  விவகாரத்தில் எங்கள் வீடுகளில் இதுவரை 3 முறை சோதனை நடத்தப்பட்டுள்ளது என்ற அவர், இன்றைய சோதனையின்போது, டில்லியில் உள்ள எங்கள்  வீட்டின் சமையல் அறை, படுக்கை அறை என பல அறைகளில் சோதனை நடத்தப்பட்டது.ஆனால், இந்த சோதனையில் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்றார்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கின் கீழ் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது  திட்டமிட்ட நாடகம் என்றும், 2012-13 கால கட்டத்தில் ஏர்செல் – மேக்ஸிஸ் விவகாரம் தொடர்பாக நான் நாடாளுமன்றத்தில் வாசித்த சில அறிக்கைகள் அடங்கிய காகிதங்களை அமலாக்கத்துறையினர்  எடுத்து சென்றுள்ளனர் என்று தெரிவித்தார்.