சென்னை:

மிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் இணையதளம் மூலம்  விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்ய கடைசி நாள் மே 31-ந்தேதி.

பொறியியல் விண்ணப்பம், கலந்தாய்வு போன்றவைகளை கடந்த பல ஆண்டுகளாக அண்ணா யுனிவர்சிட்டி திறம்பட செயல்படுத்தி வந்த நிலையில், இந்த ஆண்டுமுதல் தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்கம் நடத்துகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 42  இடங்களில் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து,  2019-20-ம் கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக். பட்டப்படிப்பில் சேர இணையதளங்கள் மூலம் இன்று (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இணையதள வசதி இல்லாதவர்கள் தங்களது பகுதியில் உள்ள தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் தமிழகம் முழுவதும் சேவை மையங்கள்  மூலமாக விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி

 www.tneaonline.in, www.tndte.gov.in

விண்ணப்பிக்கும் மாணவர்கள் விண்ணப்ப கட்டணத்தை டெபிட், கிரெடிட் கார்டுகள் மற்றும் நெட் பேங்கிங் மூலமாகவும் செலுத்தலாம். ஆன்லைனில் பணம் செலுத்த முடியாத விண்ணப்ப தாரர்கள் ‘செயலாளர், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை’ என்ற பெயரில் வரைவோலையாக எடுத்து சேவை மையங்களில் அளிக்கலாம். விண்ணப்பத்தில் அருகில் உள்ள சேவை மையம் ஏதாவது ஒன்றை குறிப்பிட வேண்டும். ஏனெனில் அந்த சேவை மையத்தில் தான் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். விண்ணப்பிக்க மே 31-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

இதுகுறித்து தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் இயக்குனர்  விவேகானந்தன் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

‘தொழில்நுட்ப கல்வி துறை கலந்தாய்வு இணையதளம் தயாராக இருக்கிறது விண்ணப்ப பதிவு இணையதளத்துக்கான உரிமத்துக்கு உரிய கட்டணம் செலுத்தப்பட்டு உள்ளது. இணையதளம் தயாராக இல்லை என்று வந்த செய்தி தவறானது. மேலும் தகவல்களுக்கு 044 22351014, 22351015 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்வதற்கு தேவையான முன்னேற்பாடுகள்…..

இணையதள முகவரிக்கு உள்ளே சென்றதும் மாணவர்கள் முதலில் உள்நுழைவு ஐ.டி. மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும். பிறகு மாணவர்கள் தங்கள் பெயர், ஊர், முகவரி, கல்வி நிலை விவரம் (8 முதல் 12-ம் வகுப்பு வரை), பெற்றோர் பற்றிய விவரம் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.

மாணவர்களுக்கு செல்போன் எண், சுய மின்னஞ்சல் முகவரி அவசியம். அந்த எண், மின்னஞ்சல் முகவரிக்குத்தான் ரேண்டம் எண், தரவரிசை பட்டியல், கலந்தாய்வுக்கான நாள் ஆகிய விவரங்கள் தெரிவிக்கப்படும்.

தமிழகத்தில் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் பதிவு எண்ணை மட்டும் பதிவு செய்தால் போதும். எவ்வித சான்றிதழையும் ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. வெளிமாநில மாணவர்கள் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

முன்னாள் ராணுவத்தினரின் மகன் மற்றும் மகள், விளையாட்டு வீரர், மாற்றுத்திறனாளி என்றால் அதற்குரிய சிறப்பு சான்றிதழ் கட்டாயம். பெற்றோரின் ஆண்டு வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் அவசியம். விருப்பம் இருந்தால் ஆதார் எண்ணை பதிவு செய்யலாம்.

முதல் பட்டதாரி என்றால் அதற்குரிய தனிச்சான்று அவசியம். அப்போது தான் அவர்கள் உதவித்தொகை பெற முடியும்.

பொதுப்பிரிவு மாணவர்கள் ரூ.500-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் ரூ.250-ம் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

அதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஜூன் 6-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெறும்.

இந்த பணி அரசின் 42 சேவை மையங்களில் மட்டுமே நடைபெறும். அப்போது விண்ணப்ப பதிவு மேற்கொண்ட அனைவரும் சேவை மையத்துக்கு நேரில் சென்று தங்களின் சான்றிதழ்களை சரிபார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும்.

ஜூன் 17-ந்தேதி தரவரிசை பட்டியல் www.tneaonline.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

மாணவர்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கும், செல்போன் எண்ணுக்கும் அனுப்பப்படும். தரவரிசை பட்டியலின்படி, ஜூலை 3-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.

மாணவர்களின் தரவரிசை எண்ணிக்கைக்கு ஏற்ப எந்த தேதியில் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்ற தகவல் மின்னஞ்சல் முகவரிக்கும், செல்போன் எண்ணுக்கும் செய்தி அனுப்பப்படும்.

மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு கலந்தாய்வு ஜூன் 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெறும். இது சென்னையில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் நேரடியாக நடைபெறும்.

பொதுப்பிரிவு மாணவர்கள் நேரடியாக வர வேண்டிய அவசியமில்லை. இணையதள வழி கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.